தமிழ் தலைமைகளுக்கு புலம்பெயர் தமிழர்கள் கூறும் செய்தி
1987 ஆம் ஆண்டில் இந்தோ - சிறிலங்கா ஒப்பந்தத்தின் மூலம் உருவான 13 ஆம் திருத்தச் சட்டத்தை ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு தீர்வாக காட்டுவதை தமிழ் அரசியல்வாதிகள் நிறுத்தவேண்டுமென பிரித்தானிய தலைநகர் லண்டனில் நேற்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரித்தானிய கிளையின் ஏற்பாட்டில் நேற்று பிரித்தானிய பிரதமரின் வதிவிடத்திற்கு அருகில் நடத்தப்பட்ட அறவழி போராட்டத்தில் இந்தக் கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் ஒற்றையாட்சியை வலியுறுத்தும் அரசியல் யாப்பை தமிழ் மக்கள் ஏற்க முயல்வதாக, சில அரசியலவாதிகள் சுயநல நோக்கோடு காட்ட முயல்வதாக இதன்போது கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு இந்திய அரசை வலியுறுத்தி தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியப் பிரதமருக்கு எழுதப்பட்ட கடிதத்தில், தமிழ் மக்களை பிராந்திய சிறுபான்மையினர் என்கிற வகையில் வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு இந்திய அரசை வலியுறுத்தி தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதம் நாளை 18ஆம் திகதி சிறிலங்காவில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கவுள்ள நிலையில் இந்த எதிர்ப்புப்போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.