15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - கோட்டாபயவிடம் அழுது புலம்பினாரா தேரர்?
கல்கிஸையைச் சேர்ந்த15 வயதுடைய சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டமை தொடர்பில் 40 இற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தனக்கும் அந்த சிறுமியின் பாலியல் வன்கொடுமைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கோட்டை பொடி சாது என்ற அத்தரகம பஞ்சாலோக்க தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துடன் கோட்டை பொடிசாதுவுக்கு தொடர்பு இருப்பதாகவும் அதனால் தன்னை காப்பாற்றுமாறு அவர் ஜனாதிபதி கோட்டாபயவிடம் தொலைபேசியில் அழுது புலம்பியதாகவும் அதன்பின் குறித்த விடயம் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்தி வௌியாகியிருந்தன.
எனினும் தனக்கு எதிராக சில சமூக ஊடகங்களில் சேறு பூசும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
குறித்த பாலியல் வன்கொடுமையுடன் தொடர்புபட்ட பிக்கு கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தன்னை இந்த சம்பவத்துடன் தொடர்புபடுத்துவதால் தனது குடும்பத்தால் மற்றும் பரம்பரைக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தேரர் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய சேரிடம் காப்பாற்றுமாறு தான் அழுததாக சில ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 50 வயதுடைய தான் ஒரு சிறுநீரகத்தை அன்பளிப்பு செய்துள்ளதாகவும் தன் மீது இவ்வாறு பழிசுமத்துவது பொருத்தமற்றது எனவும் கோட்டை பொடிசாது குறிப்பிட்டுள்ளார்.
ஒருசில பிக்குகளின் பிழைகளுக்கு அனைத்து பிக்குகளையும் கூட்டிணைப்பது தவறு என அவர் கூறியுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை செய்த பின் ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட போதே தேரர் இவ்வாறு தெரிவித்தார்.