உலகில் எதாவது ஒரு இடத்தில் தமிழ் மொழி ஆட்சி மொழியாக மாற வேண்டும் - பேராசிரியர். பஞ். இராமலிங்கம்!
ஒட்டுமொத்த தமிழர்களையும் ஒன்றிணைக்கக்கூடிய ஒரே அமைப்பாக உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் உள்ளது.
ஐரோப்பிய நாடுகளில், எமது இரண்டாம் தலைமுறையினர், மூன்றாம் தலைமுறையினர் மொழியை பின்னுக்கு வைத்து விட்டு முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே, மொழியையும் பண்பாட்டையும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இந்த உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது."
இவ்வாறு பேராசிரியர் பஞ். இராமலிங்கம் அவர்கள் ஐ.பி.சி தமிழுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
16 ஆவது சர்வதேச மாநாடு
தொடர்ந்து அவர்,
"இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கமானது பல தளங்களில் சிறப்பாக இயங்கி வருவதுடன், தமிழகத்திலும் அதற்கான முன்னெடுப்புக்கள் மிகச் சரியாக செயற்படுத்தப்படுகிறது.
அண்மையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களும் புலம்பெயர் தமிழ் மக்களுக்காக அமைப்பொன்றினை உருவாக்கி அவர்களுக்கு சரியானதொரு அங்கீகாரத்தை வழங்கிக்கொண்டிருக்கிறார்.
தமிழர் பண்பாட்டுடன் நிக்காமல், தமிழர்களின் வாழ்வாதாரம், அவர்கள் எதிர்கொள்கின்ற சிக்கல்கள் போன்றவற்றையும் சேர்த்து இலண்டனில் உள்ள வழக்கறிஞர் அமுது இளஞ்செழியன் அவர்கள் மிகச் சிறப்பாக இதனை நடத்திக் கொண்டிருக்கிறார்.
இந்தநிலையில், மொரிசியஸ் நாட்டில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24 ம் திகதி முதல் 26 ம் திகதி வரை உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் 16 ஆவது பன்னாட்டு மாநாடு நடைபெறவுள்ளது.
அதில் முக்கிய கருப்பொருளாக புலம்பெயர்ந்த தமிழர்கள் எதிர்நோக்கும் வாய்ப்புகளும், சவால்களும் எனும் தலைப்பில் 120 க்கும் மேற்பட்ட அறிஞர்கள் கட்டுரைகளை வழங்கவுள்ளார்கள்.
தமிழ் மொழி
"உலகில் தமிழ் மக்கள் சிதறிப்போயுள்ளதற்கும், தமிழ் மொழி தன்னுடைய இடத்தை எட்ட முடியாமல் இருப்பதற்கும் காரணம், தமிழ் மொழி எந்த நாட்டிலும் ஆட்சி மொழியாக இல்லாமையே.
உலகில் எதாவது ஒரு இடத்தில் எமது தமிழ் மொழி ஆட்சி மொழியாக, அதிகார மொழியாக மாற வேண்டும், அதற்கான முயற்சியை எடுத்துக்கொண்டு இருக்கிறோம்."
இவ்வாறு உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் 16 ஆவது பன்னாட்டு மாநாட்டின் செயலரும், பேராசியருமான பஞ். இராமலிங்கம் கூறியுள்ளார்.
பேராசிரியர் பஞ். இராமலிங்கம் அவர்களின் நேர்காணலின் முழு வடிவத்தை கீழே உள்ள காணொளியில் காணலாம்.
