யாழ். அல்லைப்பிட்டியில் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவன் : நீதி கோரி வெடித்த போராட்டம்
யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டியில் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறுவனுக்கு நீதி வேண்டி ஊர்காவற்றுறை பகுதியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கடந்த பெப்ரவரி மாதம் அல்லைப்பிட்டி பகுதியில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான 17 வயதான அ.அருள்பாயஸ் என்ற சிறுவனுக்கு நீதி கோரி இன்று (10) ஊர்காவற்றுறை காவல் நிலையம் முன்பாக போராட்டம் இடம்பெற்றது.
மனித உரிமை ஆர்வலர் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தின் போது சிறுவனின் உறவுகள் மற்றும் ஏனையோர் கலந்துகொண்டு, காவல்துறையினருக்கு எதிரான கோசங்கள் எழுதிய பதாகைகளை தாங்கியிருந்தனர்.
பதாகைகளை தாங்கியிருந்தனர்
குறித்த போராட்டம் ஊர்காவற்றுறை நீதிமன்றின் முன்பாக காலை 11 மணிக்கு ஆரம்பமான நிலையில், நீதிமன்ற காவல்துறையினரால் நீதுமன்றுக்கு முன்பாக போராட்டம் நடத்த முடியாது எனக் கூறி நீதிமன்ற வளாகத்தை கடந்து போராட்டத்தை முன்னெடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்ற போராட்டக்காரர்கள் பின்பு ஊர்காவற்றுறை காவல் நிலையம் முன்பாக ஒன்றுகூடி போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது போராட்டக்காரர்கள் காவல்துறையினரின் செயலைக் கண்டித்து பல்வேறு சுலோங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கி, கோசமிட்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
அத்துடன் குறித்த கொலைக்கு காரணமான காவல்துறையினரை தண்டிக்க வேண்டும் என்றும் குறிப்பாக தனது மகனை காவல் நிலைய பொறுப்பதிகாரியே சுட்டதாகவும் குற்றம் சாட்டினர்.

அத்துடன் மிலேச்சத்தனமான கொலைகளை காவல்துறையினர் இனியொரு தடவை மேற்கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தியதுடன் நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
முன்னதாக, கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி அதிகாலை 1.15 மணியளவில் வேலணை - அல்லைப்பிட்டிப் பகுதியில் உத்தரவை மீறி கடமையில் இருந்த காவல்துறையினரை மோதிவிட்டு தப்பிச்செல்ல முற்றட்ட ஹயஸ் ரக வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போதே குறித்த 17 வயது சிறுவன் உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |