மண்டைதீவு படுகொலை … கடலால் சூழப்பட்ட ஒரு தீவின் இரத்த நினைவுகள்...
தமிழர் தாயகத்தின் ஒவ்வொரு நிலப்பரப்பும் ஒரு வரலாற்றைச் சுமக்கிறது. சில இடங்கள் வீரத்தின் நினைவுகளால் அடையாளம் பெறுகின்றன.
சில இடங்கள் கலை, பண்பாடு, நாகரிகத்தின் சின்னங்களாக விளங்குகின்றன.
ஆனால் சில இடங்கள் மனித மனம் தாங்க முடியாத துயரங்களின் சாட்சிகளாக வரலாற்றில் நிலைத்திருக்கின்றன. அவ்வாறான இடங்களில் ஒன்று மண்டதீவு.
[9XMZ2QF ]
குருதியில் நனைந்த நாள்
யாழ்ப்பாணக் குடாநாட்டின் மேற்குக் கடலில் அமைந்துள்ள இந்தச் சிறிய தீவு, நூற்றாண்டுகளாக மீன்பிடியையும் விவசாயத்தையும் வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்த எளிய மக்களின் நிலம்.
கடலின் உப்புக் காற்றோடு வாழ்வின் இனிமையையும் துன்பத்தையும் பகிர்ந்து கொண்ட மக்கள் வாழ்ந்த இடம். ஆனால் 1985 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் நாள், அந்தத் தீவின் அமைதியை இராணுவ வன்முறையின் காலணிகள் மிதித்துச் சென்றன.
அன்றைய நாள் மண்டதீவின் மண் இரத்தத்தால் நனைந்தது. அப்பாவி பொதுமக்கள் குறிவைக்கப்பட்டனர். ஆயுதம் ஏந்தாத மனிதர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தமது அன்றாட வாழ்வின் சாதாரண பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் திடீரென மரணத்தின் முகத்தை எதிர்கொண்டனர்.
குழந்தைகள் தந்தைகளை இழந்தனர். பெண்கள் கணவர்களை இழந்தனர். முதியவர்கள் தமது பிள்ளைகளின் சடலங்களைக் கண்டனர். ஒரு நாளில் ஒரு சமூகத்தின் இதயத்தில் அழியாத காயமாக மண்டதீவுப்படுகொலை அரங்கேற்றப்பட்டது.
மறைக்க முடியாத சாட்சிகள்
மண்டதீவுப் படுகொலை குறித்து நினைவுகொள்வது என்பது, வெறும் ஒரு நிகழ்வை நினைவுகூர்வதல்ல. அது ஒரு காலகட்டத்தைப் புரிந்துகொள்வதாகும். 1980களின் நடுப்பகுதி தமிழர் தாயகத்தில் அரச பயங்கரவாதம் உச்சத்தை அடைந்த காலமாக இருந்தது.
1983 ஆம் ஆண்டின் கறுப்பு ஜூலை இனப்படுகொலையின் பின்னர் தமிழர் பகுதிகள் முழுவதும் இராணுவமயமாக்கல் தீவிரமடைந்திருந்தது. கிராமங்கள் முற்றுகையிடப்பட்டன. இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
மண்டதீவு அந்தப் பெரும் இரத்தப் பின்னணியின் ஒரு பகுதி. இந்தப் படுகொலை பற்றிய சாட்சியங்கள் இன்று கூட மனதை உலுக்குகின்றன. உயிர் தப்பியவர்கள் பின்னர் கூறிய நினைவுகள் அச்சத்தைய்யம் அலறலையும் துப்பாக்கிச் சத்தத்தையும் இன்றும் அணுக்கமாக உணர்த்துகின்றன.
இரத்தம் படிந்தபடி சிதைந்த குடும்பங்கள் மீண்டும் மீண்டும் நினைவில் தோன்றுகின்றன. பல தாய்மார்கள் தமது பிள்ளைகளின் உடல்களைத் தேடி கதறியதாகவும், பல குழந்தைகள் தமது பெற்றோர்களை இழந்து அநாதைகளாகியதாகவும் இப் படுகொலை பற்றிய பதிவுகள் கூறுகின்றன.
அரசின் அதிகாரபூர்வ ஆவணங்கள் சில நேரங்களில் இந்த உண்மைகள் மறைக்கப்டலாம். ஆனால் மக்களின் நினைவுகளில் அவை மறைக்க முடியாத சாட்சிகளாக நினைவில் மீள் எழுகின்றன.
நீதிக்கான காத்திருப்பு
தமிழர் வரலாற்றில் நினைவுகூரல் என்பது வெறும் அஞ்சலி நிகழ்வு அல்ல. அது ஒரு அரசியல் செயற்பாடாகும். அதிகாரம் மறைக்க முயலும் உண்மைகளை உயிரோடு வைத்திருக்கும் ஒரு போராட்டமாகும்.
மண்டதீவை நினைவுகூர்வதும் அத்தகைய ஒரு செயற்பாடே. ஏனெனில் இந்தப் படுகொலைக்குப் பொறுப்பானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் உண்மையையும் நீதியையும் இன்னமும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.
நினைவுகளை அழிப்பதற்கான முயற்சிகள் உலகெங்கும் நிகழ்ந்துள்ளன. ஆக்கிரமிப்பாளர்கள் முதலில் அழிக்க முயல்வது மக்களின் நினைவுகளையே. ஏனெனில் நினைவுகள்தான் எதிர்ப்பின் விதைகள்.
ஆனால் தமிழர் மக்களின் வரலாறு நினைவுகளை இழக்காத ஒரு மக்களின் வரலாறு. குமுதினிப் படுகொலை, வல்வெட்டித்துறைப் படுகொலை, நாவற்குழி, அல்லைப்பிட்டி, முள்ளிவாய்க்கால் என எண்ணற்ற துயரங்கள் தலைமுறைகளைக் கடந்து நினைவுகூரப்படுகின்றன.
அந்த நினைவுத் தொடரின் ஒரு முக்கியமான வளையமாக மண்டதீவு திகழ்கிறது.
அழியாத நினைவுகள்
இன்று மண்டதீவை நினைவுகூரும்போது, உயிரிழந்தவர்களை எண்ணிக்கைகளாக அல்ல, மனிதர்களாகப் பார்க்க வேண்டும். அவர்கள் கனவுகளைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எதிர்காலத்தை நம்பியிருந்தார்கள்.
அவர்கள் குடும்பங்களுக்காக உழைத்தார்கள். அவர்கள் வாழ விரும்பினார்கள். ஆனால் இனவெறியும் அரச வன்முறையும் அவர்களின் வாழ்க்கையைப் பறித்தது. அந்த மனித முகங்களையே வரலாறு மீட்டெடுக்க வேண்டும்.
இன்று மண்டதீவுப் படுகொலை நினைவு நாள். கடல் அலைகள் மண்டதீவின் கரைகளை மீண்டும் மீண்டும் தொட்டுச் செல்லும். ஆனால் நாற்பது ஆண்டுகளுக்கு முன் அந்த மண்ணில் சிந்தப்பட்ட இரத்தத்தின் நினைவுகளை அவை அழித்துவிட முடியாது.
காலம் பலவற்றை மாற்றிவிட்டது. தலைமுறைகள் மாறிவிட்டன. ஆனால் எங்கள் நிலத்தில் அநீதிகள் இழைக்கப்பட்ட இடங்களிலெல்லாம் தொடர்கின்ற நீதிக்கான தேடல் மாத்திரம் இன்னும் முடிவடையவில்லை. நீதியற்ற அமைதி உண்மையான அமைதியல்ல.
மறக்கப்பட்ட துயரங்கள் மறைந்துவிடுவதில்லை. நினைவுகளை ஒடுக்க முடியும். ஆனால் அவற்றை ஒருபோதும் அழிக்க முடியாது. கடலால் சூழப்பட்ட அந்தச் சிறிய தீவு இன்று ஒரு பெரிய வரலாற்றுச் சாட்சியாக நிற்கிறது.
அங்கே உயிரிழந்தவர்களின் நினைவுகள், தமிழர் வரலாற்றின் கூட்டுமனச்சாட்சியாகத் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றன. அந்தக் குரல்களைக் கேட்பதும், அந்னைவுகளைப் பாதுகாப்பதும் உண்மையையும் நீதியையும் கோரும் அத் தீவின் மக்களின் போராட்டத்தைப் பற்றிக்கொள்ளுதலாகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepan அவரால் எழுதப்பட்டு, 10 June, 2026 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
மண்டைதீவு படுகொலை … கடலால் சூழப்பட்ட ஒரு தீவின் இரத்த நினைவுகள்... 1 மணி நேரம் முன்