பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1700 சம்பளம் : அரச தரப்பு வெளியிட்ட தகவல்
அரசாங்கம் உறுதியளித்தவாறு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாவினை நாளாந்த வேதனமாகப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன (Samantha Viddyarathna) தெரிவித்துள்ளார்.
வெலிமடையில் (Welimada) நேற்று (12.04.2025) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் “கடந்த காலங்களில் வேதன அதிகரிப்பிற்காக பெருந்தோட்ட தொழிலாளர்கள் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.
பெருந்தோட்ட தொழிலாளர்
இம்முறை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான வேதனம் தொடர்பில் ஜனாதிபதி பாதீட்டினூடாக உறுதியொன்றை வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் 3 தடவைகள் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்தியபோதிலும், இணக்கம் ஏற்படவில்லை. இணக்கம் இல்லையேல், அவர்களுக்கும் தமக்கும் இடையில் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி என்னிடம் கோரினார்.
உறுதியளித்தவாறு நாம் வேதனத்தை பெற்றுக்கொடுப்போம். அரச பணியாளர்களுக்கு வேதனம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், தனியார் துறையும் வேதன அதிகரிப்புக்கு இணங்கியுள்ளது.
சமூக உட்கட்டமைப்பு அமைச்சர்
எனினும் தனித்தனியாக சில கம்பனிகள் வேதன அதிகரிப்புக்கு இணக்கம் வெளியிட்டபோதிலும் சங்கமாக இணக்கம் வெளியிடவில்லை.
எனவே அரசாங்கமாக பேச்சுவார்த்தை மூலம் இதற்குத் தீர்வுகாண முயற்சிக்கிறோம் அல்லது மாற்று வழியிலேனும் அதனைப் பெற்றுக்கொடுப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
