1983இல் நடந்த வெலிக்கடை படுகொலை! நீதி கோரும் தமிழ் எம்.பி
அநுர அரசு நியாயமாக செயற்படுமாக இருந்தால் பட்டலந்த போன்று வெலிக்கடை படுகொலையையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செ.அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) தெரிவித்தார்.
வவுனியாவில் (Vavuniya) உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (01) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “பட்டலந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது இவ்வளவு காலமும் தூசு தட்டாமல் இருந்து, ஜேவிபி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. உண்மையில் அதனை நாம் வரவேற்கின்றோம்.
வெலிக்கடை படுகொலை
அதேநேரம் 1983 ஆம் ஆண்டு கலவரம் வெலிக்கடை சிறைச்சாலையில் தான் ஏற்படுத்தப்பட்டது. அங்கு இடம்பெற்ற படுகொலைகளின் பின்னனியில் கலவரம் ஏற்பட்டு தமிழ் இளைஞர்கள் இயக்கங்களுக்கு சென்றனர்.
ஆகவே, ஒரு கேள்வியை இந்த அரசாங்கத்திடம் கேட்ட விரும்புகின்றேன். இதை நாடாளுன்றத்தில் கொண்டு வந்ததைப் போன்று ஜே.ஆர்.ஜெயவர்த்தன (J. R. Jayewardene) ஆட்சிக் காலத்தில் வெளியில் இருந்த காடையர்கள் உள்ளே அழைக்கப்பட்டு வெலிக்கடை சிறையில் இருந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1983 ஆம் ஆண்டு கலவரம்
அவர்களுடைய உடல்கள் எங்கே புதைக்கப்பட்டது என்பது கூட தெரியாமல் இருக்கிறது. ஆகவே இந்த அரசு நியாயமாக செயற்படுமாக இருந்தால் வெலிக்கடை படுகொலையையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பட்டலந்த பிரச்சினை எல்லாவற்றையும் விட 1983 ஆம் ஆண்டு கலவரம் கூடுதலான இழப்புக்களை சந்தித்தது. இது வரலாற்றில் முதன்மையான இடத்தில் உள்ள படுகொலை.
இதை அரசாங்கம் விசாரணைக்கு கொண்டு வந்து, அதற்கான நீதி நியாயத்தை வெளிப்படுத்த வேண்டும் என மக்கள் சார்பாகவும், வெலிக்கடையில் படுகொலை செய்யப்பட்ட போராளிகள் சார்பாகவும் கோரிக்கையை முன்வைக்கின்றேன்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
