நாடளாவிய ரீதியில் ஆரம்பமான சாதாரண தர பரீட்சை
2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று (17) ஆரம்பமாகியுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள 3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் 451,463 பரீட்சார்த்திகள் இம்முறை பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.
அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் இன்றைய தினம் காலை ஆர்வத்துடன் பரீட்சை மண்டபங்களுக்கு சமூகமளித்ததனைக் காண முடிந்தது.

இன்று காலை 8.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகியுள்ள மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களில் உள்ள மாணவர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட மண்டபங்களுக்கு பரீட்சை வழிகாட்டுதல்களுக்கு அமைவாக நேரத்துடன் சமூகமளித்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் சுமார் 32 பரீட்சை நிலையங்களில் 3,224 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகள் - ஜோசப் நயன்
கிளிநொச்சி
2026 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சைக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 3,728 மாணவர்கள் தோற்றுகின்ற நிலையில் 31 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறுகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரண்டு கல்வி வலயங்களில் இன்றைய தினம் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை எழுதுவதற்கு மாணவர்கள் ஆர்வத்துடன் வருகை தருவதை எம்மால் அவதானிக்க முடிந்தது.

ஆலயங்களில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் பரீட்சை நிலையங்களுக்கு மாணவர்கள் சென்றதை அவதானிக்க முடிந்தது
கிளிநொச்சியில் பரீட்சை நிலையங்களை இணைப்புச் செய்யும் வகையில் 10 நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு பரீட்சை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகள் - சிவா
வவுனியா
நாடு முழுவதும் இன்றையதினம் காலை 08.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு வவுனியா மாவட்டத்தில் இருந்து 4,063 மாணவர்கள் தோற்றுகின்றனர்.
வவுனியா மாவட்டத்தில் பரீ்ட்சைக்கான அனைத்து தயார்படுத்தல்களும் ஏற்கனவே பூர்த்திசெய்யப்பட்டிருந்தது.
அந்தவகையில் வவுனியா வடக்கு வலயம், மற்றும் தெற்கு வலயத்தில் இருந்து 3,231 பாடசாலை மாணவர்கள் தோற்றுவதோடு, 832 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் குறித்த பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.
மேலும் வவுனியா மாவட்டத்தில் 39 பரீட்சை மத்திய நிலையங்களும், 14 இணைப்புக் காரியாலயங்களும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகள் - கபில்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |