நிலக்கரி கொள்முதல் விவகாரம்! பதிவு செய்யப்பட்டுள்ள 23 முறைப்பாடுகள்
நிலக்கரி கொள்முதல் பரிவர்த்தனைகள் தொடர்பான முறைகேடுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு, முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் காலஎல்லையை இன்றுடன் நிறைவு செய்கின்றது.
இதன் மூலம், இந்த கொள்முதல் செயல்முறை குறித்து தங்களுக்குள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் முடிவுக்கு வருகின்றது.
நிலக்கரி கொள்முதல் விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பினராலும் இதுவரை மொத்தம் 23 முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உடனடி விசாரணை
பாதிக்கப்பட்ட அல்லது இது குறித்து அறிந்த தரப்பினர் தங்களது முறைப்பாடுகளை கொழும்பு, சாஞ்சி ஆராச்சி தோட்டம், அதிகரண மாவத்தை, இலக்கம் 12 இல் அமைந்துள்ள நீதித்துறை கட்டிடத்தின் 5ஆம் மாடியில் உள்ள ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்தோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வழிவகை செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், பெறப்பட்ட அனைத்து முறைப்பாடுகளும் விரிவாக பரிசீலிக்கப்பட்டு, அதற்கான விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
முறைப்பாட்டாளர்களுக்கு அழைப்பு
அதன்படி, முதற்கட்ட பரிசீலனை செயல்முறையைத் தொடர்ந்து, முறையான விசாரணை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சாட்சியங்களை வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு அழைப்பு விடுக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

முழு அதிகாரங்களுடன் கூடிய இந்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவராக உயர் நீதிமன்ற நீதியரசர் கிஹான் குலதுங்க செயற்படுகிறார்.
இதன் ஏனைய உறுப்பினர்களாக மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஆதித்யா படபெண்டிகே மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ சோமரத்ன ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |