யாழ் மாவட்டத்திற்கான 25,000 ரூபாய் கொடுப்பனவில் மோசடி இல்லை : அரச அதிபர் பகிரங்கம்
யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்ற 25,000 ரூபாய் கொடுப்பனவில் முறைகேடுகளோ, குளறுபடிகளோ, ஊழல் சார்ந்த செயற்பாடுகளோ இடம்பெறவில்லை என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளைக் கட்டமைக்க வழங்கப்படுகின்ற 25,000 ரூபாய் கொடுப்பனவு தொடர்பான யாழ் மாவட்டத்தின் நிலவரம் குறித்து நேற்று (05) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “30.11.2025 பிற்பகல் 6 மணிக்கு தேசிய நிவாரண சேவை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலவர அறிக்கையின் பிரகாரம் 25 மாவட்டங்களுக்குமான நிதி ஒதுக்கீடு விடுவிக்கப்பட்டுள்ளது.
குடும்பங்கள் பாதிப்பு
அந்தவகையில் யாழ் மாவட்டத்திற்கு 14,624 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதாக நாங்கள் அறிக்கை செய்திருந்தோம். அந்த அறிக்கையின் பிரகாரம் 365.6 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
05.12.2025 அன்று பிற்பகல் 5.00 மணியளவில் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திடமிருந்து கிடைக்கப்பெற்ற கடிதத்தின் பிரகாரம், முன்னைய சுற்றறிக்கையை விட மேலதிக விடயங்களும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதாவது, முற்றிலும் சேதமடைந்த வீடுகள், பகுதி அளவில் சேதமடைந்த வீடுகள் மற்றும் வீடுகளுக்கு சேதங்கள் ஏற்படாவிட்டாலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் ஆகியவற்றையும் இந்தக் கொடுப்பனவுக்கான தகுதிக்குள் உள்ளடக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் ஆகியோரின் பரிந்துரை மற்றும் கையொப்பங்களைப் பெற்று, தகுதியான பயனாளிகளுக்கு மாத்திரமே கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் பிரதேச செயலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
25,000 ரூபாய் கொடுப்பனவு
சரியான முறையில் அந்த 25,000 ரூபாய் கொடுப்பனவுகள் வழங்கப்பட்ட பின்னர், மேலதிகமாக நிதி ஒதுக்கீடு எங்களிடம் எஞ்சியிருக்குமாயின், அந்த நிதியானது மீண்டும் அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திற்கு எம்மால் அனுப்பி வைக்கப்படும்.
தற்போது கிடைக்கப்பெற்ற கடிதங்கள், சுற்றறிக்கைகள் என்பவற்றுக்கு அமைவாகப் படிவங்களை நிரப்புவதன் ஊடாக தங்களது பிரதேசங்களில் இருக்கின்ற பயனாளிகளைப் பிரதேச செயலாளர்கள் அடையாளம் கண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 7.9 வீதமானவர்கள் இந்த வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கில் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது யாழ்ப்பாணமானது அதிகளவான சனத்தொகையைக் கொண்ட மாவட்டம். ஆகையால் இந்தப் பாதிப்புக்கான நிதி ஒதுக்கீடாக எமக்கு 365.6 மில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றுள்ளது.
பிரதேச செயலகங்கள்
இந்த வெள்ள அனர்த்தத்தின்போது மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் இரவு பகல் பாராது அர்ப்பணிப்போடு செயற்பட்டார்கள்.

உத்தியோகபூர்வமற்ற, உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பகிர்கின்றபோது, கடமை உணர்வுடன் அர்ப்பணிப்பாகப் பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.
25,000 ரூபாய் பெறுவதற்குத் தகுதியான குடும்பங்களைத் தெரிவு செய்கின்றபோது, அவர்களது விபரங்களைக் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் ஆகியவற்றில் காட்சிப்படுத்துமாறு அறிவித்துள்ளோம்.
இந்தக் கொடுப்பனவுகளில் குளறுபடிகளோ, மோசடிகளோ அல்லது ஊழல்களோ இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் இல்லை. அவ்வாறான சந்தர்ப்பங்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் எப்போதும் ஏற்படாது," என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகள் - த.பிரதீபன், பு.கஜிந்தன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |