28ஆவது ஆண்டில் கால் பதிக்கும் ஐபிசி தமிழ் வானொலி
உலகத் தமிழருக்கோர் உறவுப்பாலமாய் விளங்கும் ஐ.பி.சி தமிழ் வானொலி கால்நூற்றாண்டையும் கடந்து இன்று 28ஆவது ஆண்டில் (IBC Tamil Radio) காலடி எடுத்து வைத்துள்ளது.
1997 ஜூன் மாதம் 09ஆம் திகதி பிரித்தானியாவில் தனது பயணத்தை ஆரம்பித்த ஐ.பி.சி தமிழ் வானொலி இன்று 27 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகின்றது.
பிரித்தானியாவை தளமாக கொண்டு ஆரம்பித்த ஐ.பி.சி தமிழ் வானொலி, இன்று தமிழர் தாயகமான யாழ்ப்பாணத்திலும் தனது கலையகத்தை கொண்டு சிறப்பாக ஊடகப் பணிகளை முன்னெடுத்து வருகின்றது.
ஐ.பி.சி தமிழ் குடும்பத்தின் முதலாவது தளமான ஐ.பி.சி தமிழ் வானொலி இன்று தனது 27 அகவையை நிறைவு செய்து புதிய ஆண்டில் நுழைந்துள்ளது.
ஈழத்தமிழினத்தின் அபிலாசைகளை காற்றலையில் காவிச்செல்லும் அதன் வரலாற்றுத்தடத்தில் இன்னொரு அகவை பிறந்துள்ளது.
தமிழ் ஊடகப்பரப்பில் பல வானொலிகள் இருந்தாலும் ஐ.பி.சி தமிழின் வரலாறு அவற்றைவிட வித்தியாசமானது என்பதை அதன் பிறப்புச்சான்றிதழே நிருபிக்கும்.
ஏனைய தமிழ் வானொலிகள் போல இது வெறுமனவே நேயர்கள் என விளிக்கப்படும் பயனாளர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட வானொலி அல்ல. மாறாக இது தமிழர் தாயகத்தின் அரசியல் உரிமைப்போராட்டத்துடன் பின்னிப்பிணைந்த தார்மீகத்துடன் பிறந்த ஒலிபரப்பு.
தமிழர்கள் மீதான சாட்சியமற்ற போரின் அவலங்களை மறைத்து அதற்கு மாற்றாக தமிழர்களின் அபிலாசைகள் மீதான அச்சமும் நஞ்சும் வெறுப்பும் உமிழப்பட்டபோது வானலையில் மௌனமாக இருக்கமுடியாது என்ற அடிப்படையில் பிறந்த ஐ.பி.சி காற்றலைகளைக் காவியமாக்கிய வரலாற்றுத்தடத்தில் இன்னொரு அகவையை இன்று கடக்கின்றது.
உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கு அன்றைய போர்காலச்சூழல் முதல் சமகாலம் வரை ஐ.பி.சி தமிழ் வானொலி செய்யும் பணிக்கு இன்று வானலையில் அதற்குக் கிட்டிய அகவை வாழ்த்துச்செய்திகளே சான்று வழங்கியுள்ளன.
இன்று தமிழர்தாயகம் என்ற தேச கட்டமைப்பின் இருப்பே கேள்விக்குறியாக்கப்பட்டு அச்சம், கோபம், பதற்றம், பீதி ஆகியவை அன்றாட அம்சங்களாகிவிட்டன. தமிழ் அரசியல்வாதிகளின் பொறுப்பற்றதன்மையும் தொடர்ந்து கோலோச்சுகின்றது.
இதனை ஐபிசி குழும ஊடகங்கள சுட்டிக்காட்டுவதால் விமர்சனங்களை பொறுத்துக்கொள்ளதாத அரசியல்வாதிகள் தமது முகங்ளை திருப்பி தூசிப்புகளை வெளியிட்டாலும் தமிழ் மக்களை அரசியல் ரீதியாக திடப்படுத்தவேண்டிய தார்மீகப் பணியை பல்வேறு சவால்களை எதிர் கொண்டாலும் ஐ.பி.சி தமிழ் குடும்பம் நிறைவேற்ற உறுதிகொண்டுள்ளது இதனைத்தான் என்பதை ஐ.பி.சி தமிழ் குடும்பத்தின் முதலாவது அடையாளமான ஐ.பி.சி தமிழ் வானொலி தனது 28ஆவது அகவை பிறப்பு நாளில் உறுதிகூறிப் பயணிக்கின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |

