323 கொள்கலன்கள் விவகாரம்! குற்றஞ்சாட்டப்பட்டவர் அரசாங்கத்தின் உயர் பதவியில் - எதிர்க்கட்சிகள் ஆவேசம்
கொழும்பு துறைமுகத்தில் பெளதீகப் பரிசோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட சுங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர், பணி ஓய்வுக்குப் பின்னர் அரசாங்கத்தின் உயர் பதவியொன்றில் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நல்லாட்சிக் கொள்கையின் அடிப்படையில் அரசாங்கம் செயற்படுமாயின் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ள போதிலும், அதன் இறுதி அறிக்கை வெளியாவது இரண்டு மாதங்களுக்கும் மேலாகத் தாமதப்படுத்தப்பட்டு வருவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அறிக்கை வெளியீட்டில் தாமதம்
அதன்படி, இந்த அறிக்கை வெளியீட்டில் ஏற்பட்டுள்ள தாமதம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகக் களுத்துறை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அஜித் பி. பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், கொள்கலன்கள் விடுவிப்புத் தொடர்பாக விசாரணை நடத்தும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவராக நீதியமைச்சரும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சருமான ஹர்ஷன நாணயக்கார செயற்படுகின்றார்.
அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டு
அத்துடன், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவும் தனது இறுதி அறிக்கையில், கொள்கலன்கள் பெளதீகப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்டமையை உறுதிப்படுத்தியுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், குறித்த விவகாரத்தில் அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |