வரலாற்றில் முதன்முறையாக - நாட்டில் நடந்த பாரிய மோசடி: 4 தனியார் வங்கி முகாமையாளர்களுக்கு விளக்கமறியல்
சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை 'உண்டியல்' முறை மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, நாட்டின் பிரதான 4 தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் நால்வரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (17) பிற்பகல் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து வரும் ஓகஸ்ட் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டிற்கு எந்தவொரு பொருளையும் இறக்குமதி செய்யாமல், சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பிய சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, இந்த சந்தேகநபர்கள் இன்று அந்தந்த வங்கிகளுக்குள்ளேயே வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்
இவ்வாறானதொரு கைது நடவடிக்கை வரலாற்றில் முதன்முறையாக இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தச் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, ஜெப்ரி மொஹமட் எனப்படும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதற்கமையவே, குறித்த சந்தேகநபர்களான நான்கு வங்கி முகாமையாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர் இந்த நான்கு அதிகாரிகளுக்கும் வாராந்தம் பணம் வழங்கி வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்படி, ஒருவருக்கு வாரத்திற்கு 30,000, 50,000 மற்றும் ஒரு இலட்சம் ரூபா வீதம் பணம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட நான்கு வங்கி முகாமையாளர்களில் ஒருவருக்கு ஒரு சந்தர்ப்பத்தில் சுமார் 10 இலட்சம் ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, வங்கி நிதி மோசடிகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ஜெப்ரி மொஹமட் என்பவரின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
குறித்த சந்தேகநபர் நாட்டிற்குப் பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி சுமார் 36 நிறுவனங்களை நிறுவியுள்ளதாகவும், அவற்றுக்கு வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்காக குறித்த 4 தனியார் வங்கிகளுக்குச் சென்றுள்ளதாகவும் அதிகாரி நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
அவ்வாறு பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி நாட்டிலிருந்து பணம் வெளியேறிய போதிலும், நாட்டிற்கு அத்தகைய பொருட்கள் எதுவும் இறக்குமதி செய்யப்படவில்லை என்றும் அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
விசாரணைகள்
மேலும், இன்று கைது செய்யப்பட்ட நான்கு வங்கி அதிகாரிகளும் குறித்த சந்தேகநபரை நேரில் சந்தித்து வங்கி நடவடிக்கைகளைச் செய்து கொடுத்துள்ளதுடன், ஏறக்குறைய ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இவ்வாறான சந்திப்புகள் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

வங்கி அதிகாரிகள் என்ற ரீதியில் நிறுவனமொன்றின் கணக்குகளைத் திறக்கும் போது, அந்நிறுவனங்கள் பதிவுசெய்யப்பட்டவையா எனச் சரிபார்க்க வேண்டியிருந்த போதிலும், அதைச் செய்யாமல் இந்த அதிகாரிகள் குற்ற எண்ணத்துடன் கணக்குகளைத் திறக்க ஒத்தாசையாக இருந்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், நாட்டிலிருந்து வெளியேறிய பணத்தில் 6.5 மில்லியன் ரூபா பணம் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கைகளுக்குச் சென்றுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதால், அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |