மாயமான 400 கிலோ யுரேனியம்: ஈரானின் அடுத்த திட்டம் - நிபுணர்கள் கணிப்பில் பகீர்
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 60% செறிவூட்டப்பட்ட சுமார் 400 கிலோகிராம் யுரேனியம் அழிக்கப்பட்டதாக அமெரிக்காவின் கூற்று தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவின் கூற்று தவறானதாக இருந்தால், அந்த யுரேனியம் தொகையை வைத்து ஈரான் என்ன செய்யும் என்பதை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
சர்வதேச அணுசக்தி அமைப்பு (IAEA) முன்பு தெரிவித்திருந்தபடி, ஈரானிடம் 60% செறிவூட்டப்பட்ட யுரேனியம் எங்கே உள்ளது என்பது இன்னும் தெரியவில்லை.
அணு ஆயுத பரவல்
தாக்குதலில் இவ்வளவு அளவிலான செறிவூட்டப்பட்ட யுரேனியம் தாக்கப்பட்டிருந்தால், அதனால் ஏற்பட்டிருக்கும் அணு கதிர் வீச்சு விளைவுகள் தெளிவாகக் காணப்பட்டிருக்கும். ஆனால், தற்போது வரை அத்தகைய தாக்கங்கள் எதுவும் பதிவாகவில்லை.
மேலும், செயற்கைக்கோள் தரவுகள் யுரேனியம் தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்னரே இடமாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இதனடிப்படையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஈரானின் யுரேனியம் பாதுகாப்பாக இருக்கலாம் என்பதற்கு ஒரு வலுவான கருதுகோள் காணப்படுகிறது.
நிபுணர்களின் கூற்றுப்படி, 60% செறிவூட்டப்பட்ட யுரேனியம் என்பது அணு ஆயுத தயாரிப்புக்குத் தேவையான கட்டத்தை கடந்து விட்ட அளவாகவே கருதப்படுகிறது.
மேலும், ஈரான் தற்போது IAEAவிலிருந்து விலகும் சட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இது ‘அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்த’ (NPT) ல் இருந்து முற்றிலும் விலகும் பரிணாமமாக மாறும் அபாயம் உள்ளது.
வடகொரியா சென்ற வழி
இது வடகொரியா மேற்கொண்ட வழியை ஒத்ததாகும். 2003ம் ஆண்டு வடகொரியா NPT-விலகிய பிறகு, பல அணு ஆயுதங்களை உருவாக்கியதோடு, கிழக்காசியத்தில் கூடுதல் பதற்றத்தையும் உருவாக்கியது.
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் இறங்கினால், சவுதி அரேபியா, துருக்கி போன்ற நாடுகளும் அதே பாதையில் செல்லும் அபாயம் அதிகம். இதன் விளைவாக மத்தியகிழக்கு முழுவதும் அணு ஆயுத போட்டி உருவாகும்.
இதுபோன்ற அணு ஆயுத பரவல், தென்கொரியா மற்றும் ஜப்பானையும் பாதிக்கக்கூடியது. தென்கொரியாவில் தற்போது தங்கள் நாட்டுக்கென தனிப்பட்ட அணு ஆயுதம் இருக்கவேண்டும் என்று பொதுமக்கள் 70% வலியுறுத்துகின்றனர்.
அமெரிக்கா - இஸ்ரேலுக்கு ஆபத்து
ஜப்பான் பொதுவாக அணு ஆயுத கொள்கையை எதிர்த்தாலும், எதிர்காலத்தில் பாதுகாப்பு காரணங்களால் நிலைப்பாட்டை மாற்றி கொள்ள வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில், தற்போதைய சூழ்நிலைகளின் அடிப்படையில், ஈரான் தன்னிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை நேரடியாக பேரம் பேசுவதற்கோ அல்லது அச்சுறுத்தல் வரும்போது ஆயுதமாக மாற்றுவதற்கோ பயன்படுத்தும் சாத்தியமுள்ளது.
அவ்வாறு, ஆயுதமொன்று தயாரிக்கப்பட்டால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர்ந்த அத்துமீறல் நடவடிக்கைகளுக்கு பதிலடிக்காக பயன்படுத்தப்படும் வாய்ப்பு அதிகம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
