போர் குற்ற விசாரணைக்கான நிதியை முடக்கும் அமெரிக்கா: சிறிலங்கா உட்பட பல நாடுகளுக்கு பேரிடி!!
உலகின் பல நாடுகளில் நடைபெறும் போர் குற்ற விசாரணைகள் மற்றும் நீதிக்கான முயற்சிகளுக்கு வழங்கப்படும் அமெரிக்க நிதியை நிறுத்த ட்ரம்ப் நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.
குறித்த நிதி நிறுத்தப்பட்டால், சிறிலங்கா, மியான்மார், சிரியா, உக்ரைன், நேபாளம், ஈராக், கொலம்பியா உள்ளிட்ட நாடுகளில் பல ஆண்டுகளாக இயங்கிவரும் திட்டங்களை பாதிக்கப்படும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க வெளியுறவுத்துறை எதிர்ப்பு
இந்த பரிந்துரை அமெரிக்க நிர்வாகத்தின் பட்ஜெட் அலுவலகம் (OMB) மூலம் கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டது.
எவ்வாறாயினும், இது இறுதியான முடிவாக இல்லாவிட்டாலும், அமெரிக்க வெளிவிவகாரத் துறைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு உள்ளதா தெரிவிக்கப்படுகிறது.
உக்ரைனில் நடைபெறும் போர் குற்றங்களை விசாரிக்க உதவுவதற்காக, அமெரிக்க வெளியுறவுத்துறை $18 மில்லியன் நிதியுடன் வழங்கும் திட்டம் ஒன்று ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் International Criminal Justice Initiative மூலம் செயல்படுகிறது. இந்தத் திட்டமும் தற்போது நிறுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இது போன்ற திட்டங்கள், நேரடியாக போர்முனையில் தாக்கம் ஏற்படுத்தாவிட்டாலும், போர் குற்றச்செயல்களின் ஆதாரங்களை திரட்டும் முக்கிய மூலமாக கருதப்படுகிறது.
போர் குற்றச்செயல்கள்
உக்ரைனில் கடந்த 2022 ஆம் ஆண்டு பெப்ரவரியில் ரஷ்யா நடத்திய படையெடுப்பின் பின்புலத்தில், 1,40,000க்கும் மேற்பட்ட போர் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த விசாரணைகள், போரின் பலமான ஆதாரங்களை வழங்கக்கூடிய வகையில் அமைந்துள்ளன. ஆனால் இத்தகைய திட்டங்களை நிறுத்துவது, உலகளாவிய நீதி மற்றும் மனித உரிமை பாதுகாப்பை பெரிதும் பாதிக்கும் என சுட்டிக்காட்டப்படுகிறது.
அத்துடன், மியான்மாரில் ரோகிங்கியா முஸ்லிம்கள் மீது அந்நாட்டு ராணுவம் மேற்கொண்ட வன்முறைகள், சிரியாவில் பாஷார் அல் அசாத் தலைமையிலான அரசு செய்த இனப்படுகொலை குற்றங்கள், மற்றும் சிறிலங்காவில் போருக்குப் பிறகு இடம்பெற்ற போர் குற்றச்செயல்களுக்கு நீதி தேடும் முயற்சிகளும் இத்திட்டங்களின் கீழ் நிதியுதவி பெற்றுள்ளன.
சிறிலங்காவுக்கு நேரடி பாதிப்பு
இந்த திட்டங்கள் பல வருடங்களாக ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி இருவரும் ஆதரித்து வந்தவை. ஆனால் தற்போதைய ட்ரம்ப் நிர்வாகம், “America First” கொள்கையின் கீழ், வெளிநாட்டு நிதியுதவிகளை பெரிதும் குறைத்து வருகிறது.
இதனால் மனித உரிமைகள், சட்ட மேலாதிக்கம் போன்ற அமெரிக்காவின் பாரம்பரியமான வெளியுறவுக் கொள்கைகள் பின் தள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்த பரிந்துரைகள் நடைமுறைக்கு வந்தால், உலகம் முழுவதும் நீதி தேடும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, சிறிலங்காவில் சுயமாக நீதிக்காக போராடும் சமூகங்களுக்கு, இந்த நிதியுதவி இழப்பு மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
