தந்தை செல்வா இன்னோர் தடவை மரணிப்பதை அனுமதிக்க முடியாது...
தமிழரசுக் கட்சியின் தெரிவு செய்யப்பட்ட தலைவரும், யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகூடிய விருப்ப வாக்குகளைப் பெற்றவருமான சிறீதரன் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவஞ்ஞானத்தினாலும், பதில் செயலாளர் சுமந்திரனினாலும், நாடாளுமன்றக் குழுத்தலைவர் பதவியிலிருந்து பதவி நீக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான கடிதத்தை இருவரும் நாடாளுமன்ற சபாநாயகருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுப்பியுள்ளனர்.
இது கட்சி அரசியல் குழுவின் தீர்மானம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
அரசியல் குழு தீர்மானம் என்றால் ஒருவர் முன்மொழிந்து இன்னொருவர் வழிமொழிந்திருக்க வேண்டும். அவ்வாறு எதுவும் அரசியல் குழுவில் நடந்ததாகத் தகவல்கள் இல்லை.
அவர் பதவி நீக்கப்படுவதாக பதில் செயலாளர் சுமந்திரன் தன்னிச்சையாக அறிவித்தபோது அரசியல் குழுவில் இருந்த அனைவரும் எதுவும் பேசாமல் இருந்தார்கள் என்றே செய்திகள் வருகின்றன.
பதவி நீக்கும் எண்ணம்
மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநாத் எம்.பி அவ்வாறு பதவி எதுவும் நீக்கப்படவில்லை என்றே கூறியிருக்கின்றார்.
பதில் தலைவர் சிவஞானமும் அவ்வாறு பதவி நீக்கும் எண்ணம் கட்சிக்கு இல்லை என்றும் மட்டக்களப்பில் கூறியிருக்கின்றார்.
தமிழரசுக் கட்சியில் தற்போதுள்ள கட்டமைப்புகளில் மத்திய குழு என்றாலும் சரி, அரசியல் குழு என்றாலும் சரி, ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட கட்டமைப்புகள் அல்ல.
கட்சியே முழுமையான குழப்பத்திலும், நீதிமன்ற வழக்கிலும் நிற்கும்போது இருக்கின்ற கட்டமைப்புகள் அதிகாரமுடையவை எனக் கூற முடியாது.
கட்சி குழப்பத்தில் இருக்கும் போது கட்சிக்கு வாக்களித்த மக்களே முடிவுகளினை எடுக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். எனவே உட்கட்சிப் பிரச்சினைகள் மக்கள் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட வேண்டுமே தவிர சுமந்திரன் தன்னிச்சையாக எதனையும் செய்ய முடியாது.
தார்மீக அறம்
மக்கள் நீதிமன்றம் தீர்மானிப்பதே தார்மீக அறமாக இருக்கும். மத்திய குழுவிலும், அரசியல் குழுவிலும் இருப்பவர்களில் பெரும்பான்மையோர் சுமந்திரனின் எடுபிடிகளே.
தவிர கட்சியையோ, கட்சிகளின் கொள்கைகளையோ நேசிப்பவர்கள் அல்லர். சிறீதரன் அரசியலமைப்புப் பேரவையில் இராணுவத் தளபதிக்கு வாக்களித்தார் என்பது தான் குற்றச்சாட்டு.
இது தொடர்பாக சுயாதீனமாக ஒழுக்காற்றுக் குழு விசாரணை செய்தால் தான் சாட்சியமளிக்கத்தயார் என சிறீதரன் அரசியல் குழுவில் கூறியிருக்கின்றார்.
இந்நிலையில் அவ்வாறான விசாரணைக்கு வழி விடுவதே இயற்கை நீதியாக இருக்கும். இயற்கை நீதியின்படி நீதிமன்றம் தரப்புக்களின் சம்மதத்தை பெற்றவையாக இருக்க வேண்டும்.
இராணுவத் தளபதிக்கு வாக்களித்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைப்பதற்கு கட்சிக்கோ சுமந்திரனுக்கோ அருகதை இருக்கின்றதா? என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது.
போரை நடாத்திய இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவிற்கே ஆதரவளித்த கட்சி தான் தமிழரசுக் கட்சி. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சுமந்திரன் இனவாதியான சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்கும் படி பிரச்சாரம் செய்தார் என்பது அனைவரும் அறிந்தவிடயம்.
திருகோணமலை கடற்கரையில் புத்தர் சிலை அமைத்ததை நியாயப்படுத்தியவர் சஜித் பிரேமதாச.
வடக்கு - கிழக்கில் ஆயிரம் விகாரைகளை கட்டுவேன் என சூளுரைத்தவர் அவர். தவிர வெலி ஓயாவில் குடியேறிய சிங்கள மக்களுக்கு காணிப்பத்திரம் வழங்கும் விழாவில் சுமந்திரனும் பங்கேற்று சம்பந்தனின் ஆசிச்செய்தியை வாசித்திருந்தார்.
விசாரிக்கும் உரிமை
எனவே சிறீதரன் தவறு செய்தால் அதனை விசாரிக்கும் உரிமை அவருக்கு வாக்களித்த மக்களுக்கு இருக்கின்றதே தவிர சுமந்திரனுக்கோ, அரசியல்குழுவிற்கோ கிடையாது.
சிறீதரனை பதவி நீக்குவதற்கு இராணுவத் தளபதிக்கு வாக்களித்தமையைக் காரணமாகக் கூறியபோதும் உண்மையான காரணம் அதுவல்ல.
சுமந்திரன் நகர்த்த இருக்கும் கொழும்புமைய அரசியலுக்கு சிறீதரன் இடைஞ்சலாக உள்ளார் என்பதே உண்மையான காரணமாகும்.
சிறீதரன் நாடாளுமன்றக்குழுத் தலைவராக இருக்கும் வரை சுமந்திரனது சகபாடிகளினாலும், கொழும்பு மைய்ய அரசியலை நகர்த்த முடியாதநிலை உள்ளது.
சுமந்திரனது சீடர் சாணக்கியன் பல தடவை முயற்சி செய்தபோதும் அது பயனளிக்கவில்லை. சிறீலங்கா நாடாளுமன்றம் தமிழ் மக்களுக்கு எதனையும் தரப்போவதில்லை.
ஆனால் அது தமிழ்மக்களினது அரசியல் நியாயப்பாடுகளினை முன் வைப்பதற்கு சிறந்த அரசியல் மேடையாக இருக்கும். இது ஒன்றே தமிழ் மக்களினைப் பொறுத்தவரை பயனுடைய விளைவாகும்.
தற்போது சாணக்கியன் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கின்றார். சாணக்கியன் கொழும்பு மைய அரசியலை நகர்த்துகின்ற ஒருவர்.
அவரது நியமனத்தை நாடாளுமன்றம் அங்கீகரித்தால் இனிவரும் காலங்களில் சிறீலங்கா நாடாளுமன்றம் தமிழ் மக்களின் நியாயப்பாடுகளை முன்வைக்கும் மேடையாக இருக்காது.
சாணாக்கியன் - சிறீதரனுக்கு பேசுவதற்கு இடம்கொடுப்பார் எனவும் கூற முடியாது. தற்போது கிவுல் ஓயா பிரச்சினையில் தாயக மைய அரசியலோடு நிற்பதாக படம் காட்டுவதற்கு சுமந்திரனும், சாணக்கியனும் முயற்சிக்கின்றனர்.
அது நடிப்பே ஒழிய உண்மையல்ல. சுதந்திர தினத்தை ஒட்டிய கரிநாள் போராட்டத்தில் இவர்களின் தலைக்கறுப்பையே காணமுடியவில்லை.
பெருந் தேசியவாதத்தோடு நேரடியாக மோதவேண்டி வரும் என்பதற்காக இலாவகமாக அதனைத் தவிர்த்துள்ளனர்.
இத்தனைக்கும் கரிநாள் போராட்டத்தை வரலாற்று ரீதியாக தொடக்கி வைத்தது தமிழரசுக் கட்சியேயாகும்.
சுமந்திரனின் நடத்தை அடிப்படைக் கொள்கைகளிலிருந்து தமிழரசுக் கட்சி விலகி நிற்கின்றது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
சாணக்கியன் தமிழ்த் தேசிய வழிவந்த ஒருவரல்ல. பொதுஜன முன்னணியில் வேட்பாளராக போட்டியிட்டவர். தமிழ்த் தேசியப் போராட்டத்தின் வலியை உணர்வுப்பூர்வமாக உள்வாங்கிக் கொள்ளும் நிலையில் அவர் இல்லை.
அவரது வாழ்வும் தாயகத்தை மையப்படுத்தியதாக இருக்கவில்லை. தென்னிலங்கையை மையப்படுத்தியதாகவே இருந்தது.
அரசியலமைப்பு பேரவைக்கான வாக்களிப்பு நடந்தபோது சாணக்கியன் சிறீதரனுக்கு வாக்களிக்கவில்லை. தயாசிறீ ஜெயசேகர சிறீதரனைப்பற்றி அவதூறாக பேசுவதற்கும் காரணமாக இருந்தவர் சாணக்கியன்.
இதனை மலையக தலைவர் ஒருவரிடம் தயாசிறீ நேரடியாகவே ஒப்புவித்திருந்தார்.
சிறீதரன் விசாரணை
இங்கு சிறீதரன் விசாரணைகளுக்கு அப்பாற்பட்டவர் என இக்கட்டுரையாளர் கூற வரவில்லை. அதனை மக்கள் தீர்மானிக்கட்டும் என்றே கூற வருகின்றார்.
தமிழரசுக் கட்சியில் கொழும்புமைய அரசியல்காரர்கள் வரலாறு முழுவதும் இருந்திருக்கின்றனர். மு.திருச்செல்வம், நீலன் திருச்செல்வம் போன்றோர் இதில் முக்கியமானவர்கள், அவர்களால் தாயகமைய அரசியலை மேவி தலைமைக்கு வர முடியவில்லை தற்போதுதான் சுமந்திரன் வந்திருக்கின்றார்.
சம்பந்தனும் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து இதற்கான முயற்சிகளினைச் செய்துவந்தார். தற்போது சுமந்திரன் அதன் தொடர்ச்சியைப் பேணுகின்றார்.
முதலில் கட்சியை கொழும்பு மைய அரசியலுக்கு ஆதரவாகக் கொண்டு வருவது, பின்னர் மக்களை கொண்டு வருவது என்பதே அவர்களின் இலக்கு.
ஆனால் இவர்களின் துரதிஸ்டம் கொழும்பு இவர்களினை திரும்பிப் பார்க்காதது தான். சம்பந்தன் சிங்க கொடியை அசைத்துக் காட்டித்தன் ஆதங்கத்தை தெரிவித்த போதும் கொழும்பு ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
சம்பந்தனுக்கு கொழும்பில் ஆடம்பர வீடு கிடைத்தது தான் மிச்சம். தமிழ் மக்களினை சமத்துவமாக மதிக்க கொழும்பு என்றும் தயாராக இருந்ததில்லை.
உண்மையில் சிறீதரன் விவகாரம் கட்சிப் பிரச்சினையல்ல. தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனை. தேசிய பிரச்சினையை கட்சி சார்ந்த ஒழுங்குகளினால் ஒருபோதும் தீர்க்கமுடியாது.
அதற்கு கொள்கை வழிப்பட்ட தேசிய அணுகுமுறை தேவை. தமிழரசுக் கட்சி என்ன நோக்கத்திற்காக என்ன கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதோ அந்த நிலையில் இன்று இல்லை.
அது முழுமையாக சீரமைக்கபடல் வேண்டும். தமிழரசுக் கட்சி சிதைவடைவதை மக்கள் விரும்பவில்லை. கொள்கைக்காகவும், இலக்கிற்காகவும் உருவாக்கப்பட்ட கட்சி என்ற வகையிலும், வடக்கு கிழக்கு முகம் உள்ள கட்சி என்ற வகையிலும் அது சிதைவடைவதை மக்கள் விரும்பவில்லை.
குறிப்பாகச் சொன்னால் தந்தை செல்வா இன்னோர் தடவை மரணிப்பதை அனுமதிக்க முடியாது.
சுமந்திரனின் அணுகுமுறையினால் தமிழத் தேசிய அரசியல் மோசமாக பாதிப்புக்குள்ளாகப் போகின்றது. தமிழ்த் தேசிய சத்திகளையும், மக்களினையும் சிதறடிக்கப்போகின்றது.
தேசிய மக்கள் சக்தி இனப் பிரச்சினையை நில விரிப்புக்குள் தள்ளி தாயகத்தில் ஊடுருவ முயல்கின்ற போது இது மேலும் ஆபத்தை கொடுக்கின்றது.
அதுவும் பச்சை ஆக்கிரமிப்புக்களினை தடுக்க வேண்டிய நிலையிலும், சர்வதேச அரசியல் கையாள வேண்டிய நிலையிலும், ஒருங்கிணைந்து அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டிய நிலையிலும் இந்த சிதைவு தொடர்வதானது மக்களின் கையறு நிலைக்கு கொண்டு போய் விடப் போகின்றது.
கொழும்பு மைய அரசியல்
இந்த விவகாரத்தில் சிறீதரன் என்ன செய்ய வேண்டும் என்பதில் இரண்டு வகையான கருத்துக்கள் நிலவுகின்றன.
தமிழ்த் தேசிய ஆர்வலர்களில் ஒருசாரார் சிறீதரன் கட்சிக்குள் இருந்து போராட வேண்டும் என்கின்றனர். சிறீதரனின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் பதவியை பறிப்பது என்பது சுமந்திரனின் அணுகுமுறையில் முதலாவது கட்டம்.
இரண்டாவது கட்டத்தில் அவரைக் கட்சியிலிருந்தே நீக்கும் முயற்சியில் சுமந்திரன் இறங்குவார். அதற்கு அதிக நாட்கள் எடுக்கப் போவதில்லை.
சுமந்திரன் கொழும்பு மைய அரசியலை நடாத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தேவை.
சிறீதரனை நீக்கிவிட்டால் அது இயல்பாகவே தனக்கு வந்துவிடும் என அவர் நினைக்கின்றார். பெருந்தேசியவாத சக்திகளும் இலங்கை மீது அக்கறை கொண்ட சர்வதேச, பிராந்திய சக்திகளும், தமிழ்த் தேசியப்பரப்புக்குள் கொழும்பு நலன்சார் அணியை உருவாக்க வேண்டும் என விரும்புகின்றனர்.
இவ்வாறான அணியை உருவாக்காமல் தமது நலன்களை பேண முடியாது என அவர்கள் கருதுகின்றனர்.
இவ்வளவு காலமும் தென்னிலங்கை கட்சிகளின் முகவர்களும், தென்னிலங்கைக் கட்சிகளுமே தமிழர் தாயகத்தில் கொழும்பு நலன்சார் அரசியலை முன்னெடுத்தனர்.
அது பெரியளவில் சோபிக்கவில்லை. தமிழரசுக் கட்சியை கொழும்பு நலன்சார் அரசியலுக்குள் செல்லவிடாமல் பாதுகாப்பவர் சிறீதரனே.
அவர் கட்சியை விட்டு வெளியேறினால் கட்சி முழுமையாக கொழும்பு நலன்சார் அரசியலை முன்னெடுக்கும் கட்சியாக மாறிவிடும்.
இதுவும் சிறீதரன் கட்சியை விட்டு வெளியேறக்கூடாது என்பதற்கு காரணமாக உள்ளது. இன்னொரு தரப்பினர் தமிழரசு கட்சியை இனிமேல் திருத்த முடியாது. சிறீதரன் கட்சியிலிருந்து கொண்டு தமிழ் தேசிய அரசியலை ஒருபோதும் முன்னெடுக்க முடியாது.
எனவே அவர் கட்சியை விட்டு தனது அணியுடன் வெளியேறி புதிய கட்சியை உருவாக்க வேண்டும் ஏனைய பிரக்ஞை பூர்வ தமிழ்த் தேசிய சக்திகளோடு ஒருங்கிணைந்து தமிழ்த் தேசிய அரசியலை பலப்படுத்த வேண்டும் என்ற கருத்தை முன் வைத்திருக்கின்றனர்.
இது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் வலைத்தளங்களிலும் இடம்பெற்றுவருகின்றன.
இவ்விவகாரம் தமிழ்த் தேசியத்தை பாதிக்கும் தேசிய பிரச்சினையாக இருப்பதால் மக்கள் இதில் தலையிடுவது மிகவும் அவசியம்.
மக்களினால் தெரிவு செய்யப்படும் முக்கியஸ்தர்கள் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புகளோடு உரையாடிப்பார்க்கலாம். இந்த உரையாடல் கொள்கை வழிப்பட்ட உரையாடல்களாக இருப்பது அவசியம். உரையாடல்களுக்கு கொள்கைகள் வழிகாட்டிட வேண்டுமே தவிர அமைப்பு வழிமுறைகள் வழிகாட்டக் கூடாது.
பழைய தமிழரசுக் கட்சியும் அதன் வழிவந்த தமிழர் விடுதலைக் கூட்டணியும் தேர்தல்களில் தென்னிலங்கை கட்சிகள் ஆதரிக்கும் படி பகிரங்கமாகக் கூறியது கிடையாது.
1981 ம் ஆண்டு முதன்முதலாக ஜனாதிபதித் தேர்தல் இடம் பெற்ற போது தமிழர் விடுதலைக் கூட்டணி பகிஸ்கரிக்கும் படி கூறியதே ஒழிய ஆர் ஜெயவர்த்தனாவை ஆதரிக்கும்படி கூறவில்லை.
சம்பந்தனும் சுமந்திரனும் தலைமைக்கு வந்த பின்னர் தான் சிங்கள வேட்பாளர்களை ஆதரிக்கும்படி பகிரங்கமாக பிரசாரம் செய்தனர்.
ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்களது கூட்டிருப்பையும், கூட்டுரிமையையும் கூட்டடையாளத்தையும் பாதுகாக்க பயன்படுத்த வேண்டுமே தவிர அவற்றை அழிக்க பயன்படுத்தக் கூடாது.
சிவில் அமைப்புகள் உடனடியாகவே இது பற்றிய உரையாடல்களை பொதுவெளியில் ஆரம்பிப்பது நல்லது. இதில் தாமதிக்கின்ற ஒவ்வொரு கணமும் தமிழ்த் தேசிய அரசியல் பாதாளத்திற்கு செல்வதையே ஊக்குவிக்கும், இந்த விடயங்களை அதிகாரத்துடன் கையாள்வதற்கு கட்சி அரசியலுக்கு வெளியே வெகுஜனத் திரட்சி அவசியம்.
வெகு ஜனத்திரட்சியின் முக்கியத்துவம் அண்மைக்கால போராட்டங்களில் துலாம்பாரமாகத் தெரிந்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |