குருதியில் நனைந்த தம்பலகாமம்…!
ஈழத் தமிழ் மக்களின் வரலாறு நெடுகிலும் எண்ணற்ற படுகொலைகள், இடப்பெயர்வுகள், மௌனமாக்கப்பட்ட குரல்கள் ஆகியவற்றால் நிரம்பிய இருண்ட பக்கங்களையே நிரப்பி வைத்திருக்கிறது.
அந்த இருண்ட பக்கங்களில் ஒன்றாக, தம்பலகாமம் படுகொலைகள் இன்று வரை தமிழ் சமூக நினைவில் ஆறாத காயமாக நிலைத்திருக்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 03 அன்று, உயிரிழந்த அப்பாவி மக்களை நினைவுகூர்ந்து, நீதி மறுக்கப்பட்ட வரலாற்றை மீண்டும் கேள்விக்குள்ளாக்கும் நாளாக இந்த நினைவு நாள் அமைகிறது. எனினும் அதிகம் பேசப்படாத ஒரு படுகொலையின் நினைவாகவும் இந்த நாளைக் காலம் மறந்துவிடுகிற சூழலும் இருக்கின்றது.
🛑 குருதியால் நனைந்த நாள்
தமிழ் ஈழத்தின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள தம்பலகாமம், ஒரு விவசாயக் கிராமப் பகுதி. அன்றாட வாழ்வில் விவசாயமும், கூலி உழைப்பும், குடும்ப உறவுகளுமே மக்களின் உலகமாக இருந்தன. ஆனால் அந்த அமைதியான நிலம், ஒரே நாளில் இரத்தத்தால் நனைந்து, சோகத்தின் பெருங்குரலால் நனைந்தது.
1990களின் தொடக்கத்தில், இனவழிப்புச் செயற்பாடுகளை சிறிலங்கா அரசு தீவிரப்படுத்திய காலகட்டத்தில், தம்பலகாமம் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட வன்முறைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இலங்கைக் காவல்துறை மற்றும் சிங்கள ஊர்காவல் படையினரின் சுற்றிவளைப்பின் போது, அப்பாவிப் பொதுமக்களை இலக்காகக் கொண்டு நடத்திய இந்தத் தாக்குதல்களில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என வேறுபாடின்றி எட்டுப் பேர் கொல்லப்பட்டனர்.
🛑 வேட்டையாடப்பட்ட குழந்தைகள்
தம்பலகாமம் படுகொலைகள் வெறும் உயிரிழப்புகள் அல்ல. ஒட்டுமொத்தமாக மனித நேயத்தையே கேள்விக்கு உட்படுத்திய நிகழ்வாக எங்கள் வரலாற்றில் நிலைத்துவிட்டது. துயரம் என்னவெனில், வீட்டுக்குள் ஒளிந்த குழந்தைகளும், தாயின் மடியில் உயிர் பிரிந்த பச்சிளம் குழந்தைகளும், தப்பி ஓட முயன்ற முதியவர்களும் இந்த வன்முறையில் பலிகொள்ளப்பட்டார்கள். ஈழத் தமிழ் மக்களைப் படுகொலை செய்வதையே சட்டமும் பாதுகாப்புமெனக் கொண்டதன் விளைவாக - வெளிப்பாடாக அமைந்த இனவழிப்பு வரலாற்றில் இதற்கும் மௌனமே பதிலாகத் தொடர்கிறது.
இந்தப் படுகொலைகளுக்குப் பின்னர், பல குடும்பங்கள் தங்கள் உறவுகளை இழந்து, சொந்த நிலங்களை விட்டு அகதிகளாக மாறினர். உயிர்தப்பியவர்கள் உடலில் மட்டுமல்ல, மனதிலும் சுமந்து கொண்டிருக்கும் வலி இன்று வரை தீராத ஒன்றாகவே இருக்கிறது.
🛑 கொல்லப்பட்டவர்களைப் புலிகள் என்ற அரசு
சம்பவ நாளன்று சுமார் இருபது பேர் கொண்ட குழு ஒன்று சுற்றிவளைப்பில் ஈடுபட்டது. கைது செய்யப்பட்டவர்கள் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்பு, அங்கு ஒரே இடத்தில் மிக நெருக்கமாக நிறுத்தப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தக் கொடூர நிகழ்வைத் தொடர்ந்து, கந்தளாய் காவல்துறையினர் கிராமம் முழுவதும் வீடு வீடாகச் சென்று, உயிரிழந்தவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டதாக ஒப்புக்கொள்ளும் வகையில் உறவினர்களிடமிருந்து கட்டாயமாகக் கையெழுத்துகளைப் பெற்றனர். அதே நாளில், தம்பலகாமம் பகுதியில் ஆறு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக சிறிலங்கா அரச தொலைக்காட்சி சேவை அறிவித்தது.
தம்பலகாமம் படுகொலைகளுக்குப் பிறகு, உண்மையான விசாரணையும், குற்றவாளிகளுக்கான தண்டனையும் நடைமுறைக்கு வரவில்லை. பல சாட்சிகள் அச்சுறுத்தப்பட்டனர்; சிலர் காணாமல் ஆக்கப்பட்டனர். இதனால், வழக்கம்போல இந்தப் படுகொலையின் நினைவுகளையும் மறைக்க முற்பட்டனர்.
🛑 நீதியற்ற நினைவுகள்
நீதியின்றி நினைவுகள் மட்டும் மிச்சமிருக்கும் போது, அந்த நினைவுகள் துயரத்தை விட, எதிர்ப்பின் ஆயுதங்களாக மாறின. ஜனவரி 03 நினைவு நாள், அத்தகைய எதிர்ப்பின் நாளாகவும், நீதி கோரும் நாளாகவும் அமைகிறது. தம்பலகாமம் படுகொலை நினைவு நாள், வெறும் மலர் அஞ்சலி செலுத்தும் நாளல்ல. அது இனப்படுகொலையின் ஒரு நினைவுகிளர்த்தும் நாள். நடந்த இனப்படுகொலையை நாம் மறவோம் என்பதை வரலாற்றிடம் உரக்கச் சொல்லுகிற நாளாகும்.
🛑 அஞ்சலி என்பது
ஒவ்வொரு மெழுகுவர்த்தியும், ஒவ்வொரு மலரஞ்சலியும், அழிந்த உயிர்களின் பெயரை மீண்டும் உயிர்ப்பிக்கின்றன. இந்த நினைவு நாள், இளம் தலைமுறைக்கு ஒரு பொறுப்பையும் விதைக்கிறது. படுகொலைகள் நிகழ்ந்ததை அறிந்துகொள்ளவும், அவை மீண்டும் நிகழாத வகையில் மனித உரிமை, சமத்துவம், நீதிக்கான போராட்டத்தைத் தொடரவும் இந்த நாள் தூண்டுகோலாக அமைகிறது.
தம்பலகாமம் படுகொலைகள், இலங்கைத் தமிழர் வரலாற்றில் மறைக்க முடியாத ஒரு சரித்திரம். உண்மையில் இந்நாளின் நினைவேந்தலின் அர்த்தம் என்பது, அதை நினைவில் வைத்து, இனி எந்தச் சமூகமும் இத்தகைய வன்முறைக்கு இரையாவதில்லை என்பதை உறுதி செய்யும் நாளாக இருக்க வேண்டும். இலங்கையில் இத்தகைய படுகொலைகளுக்கு நீதி, உண்மை, மனிதத்துவம் ஆகியவற்றை நோக்கி நகர்கின்றபோதுதான் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களிலும் வாழ்விலும் நம்பிக்கையும் அமைதியும் துளிர்க்கும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 03 February, 2026 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
குருதியில் நனைந்த தம்பலகாமம்…! 4 மணி நேரம் முன்