இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை…
கொக்கட்டிப்படுகொலை என்று தேடல்களை செய்தால் இரண்டு படுகொலைகளைப் பற்றிய விபரங்கள் சேகரம் ஆகின்றன.
நில ஆக்கிரமிப்புக்காகவும் இனவழிப்புக்காகவும் இரண்டுமுறை பாரிய படுகொலைகளை கொக்கட்டிச்சோலை சந்தித்துள்ளது.
அந்த வகையில் மட்டக்களப்பும் கிழக்கு மாகாணமும் பல இனப்படுகொலைகளை கடந்த காலத்தில் சந்தித்திருக்கிறது.
இன்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலங்களை ஆக்கிரமிக்க முன்னெடுக்கப்படும் பல முயற்சிகள் நடக்கின்றன.
கடந்த காலம் முழுவதும் மட்டக்களப்பையும் கிழக்கு மாகாணத்தையும் கூறுபோட இத்தகைய நடவடிக்கைகள் பல நடந்துள்ளன. அதில் ஒன்றுதான் கொக்கட்டிச்சோலைப்படுகொலை.
ஈழத்தின் புரதான ஈச்சரம்
ஒன்று 19987இல் நடந்த இனப்படுகொலை. மற்றையது 1991இல் நடந்த இனப்படுகொலை. ஈழத்தின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் தனித்துவமான வாழ்க்கை பண்பாட்டையும் வரலாற்றையும் கொண்ட மண்.
தேன் ஒழுகும் தமிழ் புளங்கும் அம் மண்ணில் சிங்கள அரசு பல்வேறு படுகொலைகளையும் ஆக்கிரமிப்புகளையும் நிகழ்த்தியிருக்கிறது.
எண்பதுகளின் துவக்கத்திலும் இறுதிப் பகுதியிலும் கிழக்கு மாகாணத்தில் முடுக்கிவிடப்பட்ட படுகொலைகளுக்குப் பின்னால் மாபெரும் அரசியல் இருக்கிறது.
நேரடியாக சிறிலங்கா அரசே அப்படுகொலைகளை நடாத்தியுமிருக்கிறது. கொக்கட்டிச்சொலை என்றதும் நம் நினைவுக்கு வருவது கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம்தான்.
ஈழத்தின் புரதானமான தான்தோன்றீச்சரமாக விளங்கும் இக்கோவில் ஈழத்தின் சிவ ஈச்சரங்களில் ஒன்று. திருகோணமலை மண்ணில் கோணேச்சர ஆலயம் முக்கியத்துவம் பெறுகிறது.
அது கிழக்கு மாகாணத்திற்கு மாத்திரமின்றி தமிழர் தேசத்திற்கே பெருமையும் ஆதாரமுமாய் அமைந்த கோவில். மட்டக்களப்பு மண்ணில் தான்தோன்றியாக உருவெடுத்த கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம் அந்நியப் படையெடுப்புக்களின் போது அழிக்கப்பட்டது.
போர்த்துக்கேயர் ஆட்சிக் காலத்தில் "புல்லுண்ட கல் நந்தி" இக்கோவிலின் பெருமைகளில் ஒன்றாக இருப்பது மீண்டுமொருமுறை உயிர்த்தலின் அடையாளமதாகும்.
ஜே.ஆரின் திட்டமிட்ட இன அழிப்பு
கொக்கட்டிச்சோலையின் இப்பெருமை முகத்தில் இனவழிப்புக் குருதியினால் கோடுகளை வரைந்தது இலங்கை அரசு.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கைளில் ஒன்றான கொக்கட்டிச்சோலையின் முதற் பகுதி 1987ஆம் ஆண்டில் தை 28, 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் நிகழ்த்தப்பட்டது.
ஜே.ஆரின் வழிநடத்தலில் இலங்கை அரசின் விசேட அதிரடிப்படைகள் நடத்திய கோர இனப்படுகொலை அதுவாகும். கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் உள்ள கிராமங்கே இரத்ததினால் உறைந்த அந்தப் படுகொலையில் 86இற்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
12பேருக்கு என்ன நடந்தது என்று தெரியாமலே காணாமல் போயினர். கொக்கட்டிச்சோலைக் கிராமங்களை இலங்கை அரசின் விசேட படைகள் சுற்றி வளைத்திருக்க வான் வழியாகவும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
மண்முனைத்துறைக்கும் மகிழடித் தீவுக்கும் இடையில் உள்ள இறால் பண்ணையில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்ளைதான் முதலில் படுகொலை செய்தனர் அதிரடிப்படையினர்.
அன்று இறால் பண்ணையே இரத்தப் பண்ணையாக மாறியது என்று எழுதுகிறார் மணலாறு விஜயன். அந்த மக்களை கைது செய்து தமது துப்பாக்கிளால் சுட்டு வெறிதீர்த்த பின் ரயரிட்டு எரித்து தமது இனவெறியை தீர்த்துக் கொண்டனர்.
இரண்டாவது இனவழிப்பு
இந்தப் படுகொலை நடைபெற்று நான்கு வருடங்களின் பின்னர், ஜூன் 12ஆம்நாள் மற்றொரு படுகொலையை சந்தித்தது கொக்கட்டிச்சோலை. மரணத்தின் மேல் மரணமாக குருதியின் மேல் குருதியாக இப் படுகொலை நிகழ்த்தப்பட்டது.
இப் படுகொலையின் போது 150 தமிழர்கள் கொல்லப்பட்டனர். பெண்களும் குழந்தைகளும் என அப்பாவித் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்று அழைக்கப்படுதலின் பெயரில் கொன்றழிக்கப்பட்ட குரூர நிகழ்வாக கருதப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொக்கட்டிச்சோலை சந்தித்த இரண்டாவது இனவழிப்பாக கருதப்படும் இப் படுகொலையுடன் வேறு பல ஒடுக்குமுறை நிகழ்வுகளுடன் இப் பகுதியில் சுமார் ஆயிரம் பேர் காணாமல் ஆக்கப்பட்டமையும் இம் மண்ணின் துயர வரலாறு ஆகும்.
இப்படுகொலையை செய்த சிறிலங்கா அரசு தன்னை தானே விசாரிக்கும் ஆணைக்குழு ஒன்றையும் அமைத்தது. இப் படுகொலைகளை நடத்திய இலங்கை படையினரை கட்டுப்படுத்த கட்டளை அதிகாரி தவறி விட்டதாக ஆணைக்குழுவால் கண்டறியப்பட்டதாகவும் அவரைப் பதவியில் இருந்து அகற்றுமாறு ஆணைக்குழு பரிந்துரை செய்தது.
அத்துடன் படுகொலைகளில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்தினரில் 19 பேரை ஆணைக்குழு அடையாளம் கண்டதுடன் கொழும்பில் நடத்தப்பட்ட சிறிலங்கா இராணுவ விசாரணைகளில் இந்தப் 19 பேரும் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட போதும் பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டமை குறித்த ஆணைக்குழுவின் உண்மை முகமாகும்.
மட்டக்களப்பு மண்ணிற்கான நீதி
கொக்கட்டிச்சோலைப் படுகொலையை மட்டக்களப்பில் மாத்திரமின்றி ஒட்டுமொத்த ஈழமும் சர்வதேச அளவிலும் நினைவுகூரல் நிகழ்வுகள் ஆண்டுதோறும் இடம்பெற்று வருகின்றன.
இம்முமுறையும் மட்டக்களப்பில் கொக்கட்டிச்சோலை மண்டபத்தில் நினைவு நிகழ்வு இடம்பெறுகிறது. அத்துடன் பிரதேசத்தில் உள்ள ஆலயங்களில் உயிர் நீத்தவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனையும் இடம்பெறுகிறது.
ஆனாலும் இந்த ஆத்மாக்களின் சாந்தி இன்னமும் அமைதி அடையாமல் இருக்கும் என்பதை நம்மால் உணர முடிகிறது. மட்டக்களப்பு மண்ணிலிருந்து ஈழத் தமிழ் மக்களை துடைத்தெறிந்து அந்த மண்ணை அபகரிப்பதற்காகவே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
ஒரு அரசியல் நோக்கம் கருதிய இராணுவ நடவடிக்கையே கொக்கட்டிச்சோலைப் படுகொலை. மிகவும் நன்கு திட்டமிட்ட இன அழிப்பாக அன்றைய அரசால் தனது படை எந்திரத்தின் மூலம் நடாத்தப்பட்ட கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள் ஈழத் தமிழ் மக்களின் நெஞ்சில் ஆறாத காயமாக நிலைத்துவிட்டது.
இன்றைக்கு இப் படுகொலை நிகழ்த்தப்பட்டு முப்பத்தொரு வருடங்கள் கழிந்துவிட்டன. இன்றுவரையிலும் அதற்கான நீதி வழங்கப்படவில்லை. மாறாக அதற்குப் பிறகு இன்னும் பல இனப்படுகொலைகளை மட்டக்களப்பு மண்ணும் ஒட்டுமொத்த வடக்கு கிழக்கு தேசமும் முகம் கொடுத்து வந்திருக்கிறது.
முள்ளிவாய்க்காலில் மாத்திரம் இனவழிப்பு நிகழ்ந்துவிடவில்லை என்பதையும் வடக்கில் மாத்திரம் முள்ளிவாய்க்கால்கள் நிகழ்த்தப்படவில்லை என்பதையும் கிழக்கு மாகாண மண்ணில் வரலாறு முழுவதும் நடந்த கொக்கட்டிச் சோலைப் படுகொலை சொல்லி நிற்கிறது.
எல்லாப் படுகொலைகளும் நீதியைத்தான் வலியுறுத்துகின்றது. அது கொக்கட்டிச்சோலையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரையிலும் நீள்கிறது. கிழக்கில் தொடங்கி வடக்கில் நீண்டு குரல் எழுகிறது.
நம் நாட்காட்டியின் அத்தனை பக்கங்களும் இனவழிப்பால் பாதிக்கப்பட்ட எம் இனத்தின் எளிய மக்கள் போல நீதியின் தவிப்பை சிந்துகின்றன.
சர்வதேச விசாரணை ஒன்றே காலத்திற்கு முந்தைய இப் படுகொலைகளுக்கும் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கும் விடையளிக்கும் என்ற நம்பிக்கையில்தான் ஈழ மண்ணில் மக்கள் இன்னமும் உயிர் வாழ்ந்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |