450 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பு
450 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கையின் எரிபொருள் விற்பனை சந்தையில் நுழைவதற்கு மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை அனுமதி
இன்று டுவிட்டர் பதிவின் ஊடாக இதனை தெரிவித்துள்ளார்.
சீனாவின் சினோபெக், அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் மற்றும் அமெரிக்காவின் ஆர்எம் பார்க்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான ஷெல் பிஎல்சியுடன் இணைந்து இலங்கையில் எரிபொருள் விற்பனை சந்தையில் நுழைவதற்கான உரிமங்கள் வழங்கப்படவுள்ளன.
குறித்த மூன்று (03) நிறுவனங்களும் இலங்கையில் இயங்குவதற்கான உரிமங்களை வழங்குவதற்கு எரிசக்தி தொடர்பான குழு மற்றும் பிற கொள்முதல் குழுக்கள் ஒப்புதல் வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.
இந்த மூன்று நிறுவனங்களுக்கும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் (CPC) இயக்கப்படும் தலா 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஒதுக்கப்படும்.
புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள்
இலங்கையில் பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும், சேமித்து வைப்பதற்கும், விநியோகிப்பதற்கும் மற்றும் விற்பனை செய்வதற்கும் 20 வருடங்கள் அவர்களுக்கு உரிமம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு நிறுவனத்தாலும் புதிய இடங்களில் மேலும் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நிறுவப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.