அம்பாறை மாவட்டத்தில் 51 எயிட்ஸ் நோயாளர்கள் - சுகாதார சேவைகள் பணிப்பாளர்
அம்பாறை மாவட்டத்தில் 51 எயிட்ஸ் நோயாளர்கள் காணப்படுவதோடு கல்முனை பிராந்தியத்தில் 4 எயிட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணன் தெரிவித்துள்ளார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இன்று மாலை விசேட செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
எனது கருத்தில் ஐக்கிய நாடுகள் சபையினால் டிசம்பர் 1 திகதி உலக எயிட்ஸ் தினமாக அனுஸ்டிக்கப்படுகின்றது. 1981 ஆண்டு முதலாவது எயிட்ஸ் நோயாளி இனங்காணப்பட்டதை தொடர்ந்து இன்று வரை 36 மில்லியன் மக்கள் இந்த எயிட்ஸ் நோயினால் இறந்துள்ளனர்.37 மில்லியன் மக்கள் இன்று வரை எயிட்ஸ் நோயுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இலங்கையை பொறுத்தமட்டில் 2600 பேர் சிகிச்சையை எயிட்ஸ் நோய்க்காக பெற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.
இன்றும் இலங்கையில் 1000 எயிட்ஸ் நோயாளிகள் எம்மிடையே மறைந்து வாழ்கின்றனர்.தற்போது அம்பாறை மாவட்டத்தில் 51 எயிட்ஸ் நோயாளர்கள் காணப்படுகின்றனர்.
கல்முனை பிராந்தியத்தில் 4 எயிட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எயிட்ஸ் நோய் ஆனது ஒருவரின் நிர்பீடணசக்தியை இல்லாதொழிக்கின்றது.
எயிட்ஸ் நோயானது 3 முறைகளில் பிரதானமாக பரவல் அடைகின்றது.
அதாவது பாதுகாப்பற்ற பாலியல் செயற்பாடு, தாய் தந்தையினுடாக பிள்ளைக்கு கடத்தப்படுதல், பாதுகாப்பற்ற ஊசிகள் மற்றும் இரத்தமாதிரிகளின் ஊடாகவும் பரவுகின்றன.
இலங்கையை பொறுத்தமட்டில் பாதுகாப்பற்ற முறையில் ஆண் ஆணுடன் பாலியல் செயற்பாட்டில் ஈடுபடுவதனால் 40 வீதத்திற்கு அதிகமாக எயிட்ஸ் அதிகரித்து செல்கின்றமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும் என மேலும் தெரிவித்துள்ளார்.