இவ்வருடத்தில் இதுவரை 564 பேரை பலியெடுத்த வீதி விபத்துக்கள்
2023 ஆம் ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் 564 பேர் ஆபத்தான வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
ஜனவரி 1ஆம் திகதி முதல் ஏப்ரல் 9ஆம் திகதி வரை நடந்த 534 வீதி விபத்துகளில் இவர்கள் உயிரிழந்துள்ளனர். மேற்படி நபர்களின் மரணம் தவிர, 1345 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், மேலும் 2446 பேர் சிறிய காயம் அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐந்து நாட்களில் 25 பேர் பலி
கடந்த 5 நாட்களில் நடந்த 21 வீதி விபத்துகளில் 25 பேர் உயிரிழந்தனர். மேலும், வீதி விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், தினமும் 5-10 பேர் வீதி விபத்துகளில் உயிரிழப்பதாகவும் அவர் கூறினார்.
இது மிகவும் துரதிஷ்டவசமான நிலை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 90 வீதமான விபத்துக்கள் சாரதி மற்றும் பாதசாரிகளின் கவனக்குறைவினால் ஏற்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வீதி விபத்துக்கான காரணங்கள்
கவனக்குறைவு, குடிபோதை, அதீத வேகம், போக்குவரத்து விதிகளை மீறுதல், பாதசாரிகள் கவனக்குறைவாக வீதியைக் கடப்பது போன்ற காரணங்களால்தான் இதுபோன்ற விபத்துகள் அதிகம் நிகழ்ந்துள்ளன என்றார்.
குடிபோதையில் வாகனம் செலுத்துதல் மற்றும் அதிவேகமாக வாகனம் செலுத்துதல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டாம் எனவும், வீதியில் செல்லும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பு தொடர்பில் அனைத்து சாரதிகளும் போக்குவரத்து விதிகளை அவதானித்து கவனம் செலுத்துமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.