வாகன சாரதிகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சிகர தகவல்
இலங்கையில் வாகன சாரதிகளில் தொண்ணூறு வீதமானோர் பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் என கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளதாக சிரேஷ்ட கண்நோய் நிபுணர் நரேஷ் பிரதான் தெரிவித்துள்ளார்.
வாகன ஓட்டிகளின் பார்வை தொடர்பாக நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பின்படி, பல ஓட்டுநர்களுக்கு தொலைநோக்கு மற்றும் கிட்டப்பார்வை, கண்புரை, கிளௌகோமா (கண் அழுத்தம்) போன்ற கண் கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் போது
எனவே சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் போது தற்போதைய கறுப்பு வெள்ளை இலக்கத் தகடு பார்வைப் பரிசோதனை போதாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சோதனை மூலம் வாகன ஓட்டிகளின் நிறக்குருடு மற்றும் பக்க பார்வை குறைபாடுகளை கண்டறிய முடியாது என்றும், இந்த கண் குறைபாடுகளே பல போக்குவரத்து விபத்துகளுக்கு காரணம் என்றும் அவர் கூறினார்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
குறிப்பாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோன்றும் அதிக ஆபத்துள்ள கிளௌகோமாவால் பக்க பார்வை பலவீனம் மற்றும் நிறக்குருட்டுத்தன்மை ஏற்படுவதாகக் குறிப்பிட்ட நரேஷ் பிரதான், இந்த நோயினால் குருட்டுத்தன்மை ஏற்படும் அபாயமும் அதிகம் என்றார்.
எனவே சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் போது முழுமையான கண் பரிசோதனையை மேற்கொள்வதன் மூலம் வாகன விபத்துக்களை குறைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பத்து வினாடிகளுக்கும் ஒரு வாகன விபத்து
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அறிக்கைகளின்படி இலங்கையில் ஒவ்வொரு பத்து வினாடிகளுக்கும் ஒரு வாகன விபத்து இடம்பெறுவதாகவும், நாளொன்றுக்கு பத்து மரணமான வாகன விபத்துக்கள் பதிவாகி வருவதாகவும் சிரேஷ்ட கண் மருத்துவ நிபுணர் நரேஷ் பிரதான் மேலும் குறிப்பிட்டார்.
