ஐபோன் 18 ப்ரோ ரகசியங்கள் கசிவு: டாடா நிறுவனத்திடம் இந்திய அரசு விசாரணை
டாடா இலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தரவு கசிவு மற்றும் அதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் இன்னும் சந்தைக்கு வராத ஐபோன் 18 ப்ரோ மாடல் தொடர்பான ரகசிய விபரங்கள் கசிந்துள்ளமை குறித்து இந்திய அரசு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அரசாங்கத்தின் தரப்பில் இருந்து முதன்முறையாக தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலாளர் உத்தியோகபூர்வமாகப் பதிலளித்துள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய விநியோகஸ்தரான டாடா இலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட ரான்சம்வேர் (Ransomware) சைபர் தாக்குதல் மூலம் ஐபோன் 18 ப்ரோவின் பாகங்கள் அடங்கிய பட்டியல், விநியோகஸ்தர்களின் விபரங்கள் மற்றும் அதன் புகைப்படங்கள் உள்ளிட்ட மிக முக்கியமான ரகசிய ஆவணங்கள் டார்க் வெப் (Dark Web) இணையதளத்தில் வெளியிடப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.
தொழில்நுட்ப அமைச்சகம்
இந்தநிலையில் இது குறித்து விசாரித்து வருவதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் எஸ். கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு இந்த விவகாரம் இந்தியாவின் தேசிய சைபர் பாதுகாப்பு முகமையான கம்ப்யூட்டர் அவசரக்கால பதிலளிப்புக் குழுவிடம் (CERT-In) ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்பிள் நிறுவனம் தனது சர்வதேச விநியோகச் சங்கிலியை மிகவும் ரகசியமாகவும் கட்டுப்பாட்டுடனும் வைத்திருக்கும் நிலையில் இந்தத் தரவு கசிவு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 18 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் (Pro Max) மாடல்களை அறிமுகப்படுத்தவுள்ளது.
கசிந்துள்ள கோப்பு
இந்நிலையில், கசிந்துள்ள கோப்புகளில் குறிப்பிட்ட பாகங்களை விநியோகிக்கும் நிறுவனங்கள் தொடர்பான குறைந்தது ஆறு முக்கியமான ஆவணங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபரங்களை ஆப்பிள் நிறுவனம் பொதுவாகப் பகிரங்கப்படுத்துவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தரவுக் கசிவைத் தொடர்ந்து டாடா இலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தடயவியல் தணிக்கை (Forensic audit) ஒன்றை மேற்கொள்வதற்காக சர்வதேச ஆலோசனை நிறுவனம் ஒன்றை நாடியுள்ளது.
இந்த சைபர் தாக்குதலில் டெஸ்லா (Tesla), குவால்காம் (Qualcomm) மற்றும் டிஎஸ்எம்சி (TSMC) ஆகிய முன்னணி நிறுவனங்களுடன் தொடர்புடைய ஆவணங்களும் டார்க் வெப்பில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |