தரம் 5 மாணவர்கள் மூவர் மீது கொடூர தாக்குதல் -காவல்துறையும் உடந்தை
ஹொரண மில்லேனிய பிரதேச பாடசாலையொன்றின் 5ஆம் ஆண்டு மாணவர்கள் மூவரை பாடசாலைக்கு வெளியே அழைத்துச் சென்ற சம்பவம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் உதயகுமார அமரசிங்கவின் ஆலோசனையின் பேரில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதிபரின் அழைப்பை அடுத்து வந்த காவல்துறை அதிகாரிகள் அவர்களை மண்டியிட வைத்து மின்சாரத்தால் (கரன்ட்) தாக்கியுள்ளதாக தெரியவருகிறது.
கைவிலங்கு போட்ப்பட்டு தாக்கப்பட்ட மாணவர்கள்
மூன்று மாணவர்களும் கைவிலங்கு போடப்பட்டு பாடசாலைக்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் கடந்த 2ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த இரண்டு மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவி ஒருவரின் உடலில் பல தீக்காயங்கள் காணப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் உதய உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
பெண் ஆசிரியையின் பணப்பை
பெண் ஆசிரியை ஒருவரின் பணப்பை காணாமற்போன சம்பவம் தொடர்பில், அப்பள்ளியின் ஐந்தாம் ஆண்டு மாணவர்களான பன்னிரெண்டு மாணவர்களை, அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சிலர், பாடசாலையின் நூலக அறையில் வைத்து, சம்பவம் குறித்து கேட்டறிந்து தாக்கியுள்ளனர்.
அத்துடன் மில்லேனிய காவல் நிலைய பொறுப்பு அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டதை அடுத்து காவல்துறை ஜீப்பில் மூன்று உத்தியோகத்தர்கள் அங்கு வந்தனர்.மூன்று மாணவர்களை வாகனத்தில் ஏற்றி பாடசாலைக்கு வெளியே அழைத்துச் சென்றதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தகவல்கள் வெளியாகியுள்ளதாக தலைவர் தெரிவித்தார்.
