பெண்ணின் கொடூர செயல் -காவல்துறை எடுத்த உடனடி நடவடிக்கை
கடந்த 9ஆம் திகதி வெலிக்கடை காவல்துறையினர், ஒபேசேகரபுர கொலன்னாவைக்கு செல்லும் வீதியில் பெண் ஒருவர் சிறுவனை பிச்சைக்காரனாக பயன்படுத்தியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர்.
அங்கு பிச்சை எடுத்துக்கொண்டிருந்த 11 வயது சிறுவன் காவல்துறை காவலில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார்.
போதைப்பொருளுக்காக பிச்சை எடுக்க வைக்கப்பட்ட சிறுவன்
அம்பேபுஸ்ஸ பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த நிலையில் நிலுகா பிரியதர்ஷனி என்ற பெண், சிறுவனை அங்கிருந்து எடுத்துச் சென்று தனது மகனுடன் சேர்ந்து பிச்சைக்காரனாக பயன்படுத்தியதாக சிறுவனிடம் விசாரணை நடத்தியதில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சிறுவன் ஹெரோயின் போதைப் பொருளுக்காக பிச்சை எடுப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டதையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலை
சிறுவனின் வாய், உதடுகள், இடது காலின் முழங்காலுக்கு மேல் மற்றும் இரு கால்களின் பெருவிரல்களிலும் தீக்காயங்கள் காணப்பட்டதையும் காவல்துறையினர் அவதானித்துள்ளனர்.
அதன்படி, சிகிச்சை அளித்த பிறகு சிறுவனிடம் இருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளது.
சிறுவனை கடத்திச் சென்று போதைப்பொருள் அருந்துமாறு கூறப்படும் பேலியகொட நுகே வீதியைச் சேர்ந்த நிலுகா பிரியதர்ஷனி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
