அர்ச்சுனா எம்.பி மீது நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் மருத்துவர் ஜெயக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராகத் தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவு மருத்துவர், நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்ப்பு நேற்று (19-06-2026) யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் வழங்கப்பட்டுள்ளது.
தன்னைத் தொந்தரவு செய்யும் வகையில் சமூக வலைத்தளங்கள் வாயிலாக அவதூறுகளை மேற்கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் மருத்துவர் ஜெயக்குமார் ஆகியோருக்கு எதிராகத் தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவு மருத்துவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
விசேட வழக்கு
இந்த வழக்கு தீர்ப்பு கட்டளைக்காக நேற்று யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் நீதவான் நஜ்மி ஹூசைன் தலைமையில் எடுக்கப்பட்டது.
இதன்போது முதலாவது எதிர்த்தரப்புவாதியான மருத்துவர் ஜெயக்குமார் பேசிய கருத்துகள் தவறானவை அல்ல என நீதிமன்றம் நம்புவதாகக் கருதி அவர் வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டார்.

இரண்டாவது எதிர்த்தரப்புவாதியான அர்ச்சுனா தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி, அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் அவருக்குப் பேச்சுச் சுதந்திரம் உள்ளது என விளக்கமளித்திருந்தாலும் அதனை வன்மையாக நிராகரித்த நீதவான், நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் சாதாரண குடிமகனாக இருந்தாலும் பேச்சுச் சுதந்திரத்துக்கு என்று ஒரு வரையறுக்கப்பட்ட எல்லை உண்டு எனச் சுட்டிக்காட்டினார்.
எந்தவித முறையான சான்றுகளும் இன்றி ஒரு மருத்துவ அதிகாரியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தோ அல்லது அவர் ஊழல் புரிந்தார் என்றோ அவதூறு பரப்ப யாருக்கும் உரிமை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
வழக்கு தீர்ப்பு
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு எதிராக இனி எவ்விதமான அவதூறு மற்றும் போலிப் பரப்புரைகளையும் சமூக ஊடகங்களிலோ அல்லது வெளியிலோ முன்னெடுக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு எதிராக இதுவரை வெளியிடப்பட்ட அனைத்து அவதூறான மற்றும் போலிப் பிரச்சாரக் காணொலிகளையும் உடனடியாக நீக்க வேண்டும் என்றும் நீதவான் கட்டளையிட்டார்.

குறித்த வழக்கில் வழக்குத் தொடுநர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி லக்சான் டயஸின் வழிகாட்டலில் சட்டத்தரணி கனகலிங்கம் கிஷோபனாவும் அர்ச்சுனா இராமநாதன் சார்பில் சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரனும் முன்னிலையாகினர்.
இதேவேளை புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டின் ஒன்பதாம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் இலங்கையில் தீர்ப்பளிக்கப்பட்ட இரண்டாவது விசேட வழக்கு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |