தாழிறங்கும் அபாயத்தில் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி
கடும் மழை காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை, ரொசல்ல பகுதியில் வீதி தாழிறங்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாகனச் சாரதிகளுக்கு இது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு குறித்த அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த விடயத்தை நோர்வூட் நெடுஞ்சாலைகள் அலுவலகத்தின் நிறைவேற்றுப் பொறியியலாளர் ஏ.எம். சாதிக் தெரிவித்துள்ளார்.
வீதி தாழிறங்கும் அபாயம்
வீதி தாழிறங்கும் அபாயம் ஏற்பட்டுள்ள குறித்த பகுதியில் வாகனப் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, நிலவும் கடும் சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் ஹட்டனில் இருந்து கித்துல்கல வரை வாகனங்களைச் செலுத்தும் போது மிகவும் அவதானமாகச் செயற்படுமாறு நிறைவேற்றுப் பொறியியலாளர் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சீரற்ற வானிலை
இதேவேளை, தொடரும் சீரற்ற வானிலை காரணமாக சிவனொளிபாத மலையின் உச்சியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

மண்மேடு சரிந்து சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதையில் சரிந்து வீழ்ந்துள்ளதாக நல்லத்தண்ணி காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய பருவகால யாத்திரையல்லாத காலத்தில் சிவனொளிபாத மலையின் உச்சிக்கு செல்லும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், இடிக்கட்டுபான ஊடாக இரத்தினபுரி பாதைக்குச் சென்று அதனை அடைய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |