தலைவரைக் காணத் திரண்ட மக்கள் வெள்ளம்... வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…
அதிகம் வெளியில் தோன்றியிராத தலைவர். அதிகம் பேசியிராத தலைவர். ஈழ விடுதலைப் போராட்டத்தின் தனி அரசு அமைத்த புலிகளின் சாதனைகளுக்கு முன்பெ தலைவர் பிரபாகரன் அவர்களைக் காண மக்கள் வெள்ளம் திரண்டது.
ஆம், சுதுமலைப் பிரகடனம் ஈழத் தமிழ் மக்களின் நினைவுகளில் ஆழப் பதிந்தது.
காலம் கடந்து நிற்கும் தீர்க்க தரிசனமாக, தலைமுறைகளால் தேடப்படும் அரசியல் எழுச்சிப் பேச்சாக வரலாற்றில் நிலைத்துவிட்ட சுதுமலைப் பிரகடனத்தின் 40ஆவது ஆண்டு நாள் இன்றாகும்.
செயல் வீரன்
உலக வரலாற்றில் சில தலைவர்கள் சொற்களால் அல்ல, செயல்களால் தங்களது இடத்தை நிலைநிறுத்தியுள்ளனர். அத்தகைய தலைவர்களில் ஒருவராகவே ஈழத் தமிழ் மக்களின் தேசியத் தலைவராகக் கருதப்படும் வேலுப்பிள்ளை பிரபாகரன் விளங்குகிறார்.
தனிப்பட்ட வாழ்வையும், குடும்பத்தையும், எதிர்காலத்தையும் முழுமையாகத் தமிழ் மக்களின் அரசியல் இலட்சியத்திற்காக அர்ப்பணித்த அவரது வாழ்க்கை, பலரது பார்வையில் ஒரு அரசியல் நிகழ்வாக மட்டுமல்லாது, ஒரு வரலாற்று அனுபவமாகவும் திகழ்கிறது.
அவர் பெற்றிருக்கும் மதிப்பும் நினைவுமென்பது காலம் கடந்தும் தொடரும் ஒரு சமூக உணர்வாகவே பலரால் கருதப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் திட்டமிட்டு முன்னெடுத்த அவர், போர்க்களத்தில் மட்டுமல்லாது அரசியல் பேச்சுவார்த்தைகளிலும், சர்வதேச அழுத்தங்களிலும், பிராந்திய சக்திகளின் தலையீடுகளிலும் தனக்கென ஒரு அணுகுமுறையை வெளிப்படுத்தினார்.
சிறுவயதிலேயே ஆயுதப் போராட்டப் பாதையைத் தேர்ந்தெடுத்த அவர், பின்னர் உலக அரசியலின் கவனத்தை ஈர்த்த ஒரு தலைவராக உருவெடுத்தது, ஈழத் தமிழ் அரசியல் வரலாற்றின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
தலைமுறைகள் தேடும் தலைவன்
இன்றைய இளைய தலைமுறையினரும் பல்வேறு காரணங்களால் பிரபாகரனின் வாழ்க்கையையும், அவருடன் இயங்கிய தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளின் அனுபவங்களையும் மீளாய்வு செய்து வருகின்றனர்.
மிக இளவயதிலேயே தங்களது சமூகத்தின் எதிர்காலத்தைப் பற்றிய தீவிரப் பொறுப்புணர்வுடன் ஒழுக்கம், கட்டுப்பாடு, தியாக உணர்வு, சமூகப் பற்று ஆகியவற்றை முன்னிறுத்தி அவர்கள் இயங்கியதாக பலர் நினைவுகூர்கின்றனர். அந்த அனுபவங்களைப் பற்றிய உரையாடல்கள் ஒரு வரலாற்று நினைவாக மட்டுமல்லாது, சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் விவாதங்களாகவும் அமைய வேண்டும் என்ற கருத்தும் நிலவுகிறது.
அதேவேளை, அந்தக் காலத்தில் ஆயுதம் ஏந்தியதன் நோக்கம் எதிர்காலத் தலைமுறைகள் மீண்டும் ஆயுதத்தை நாட வேண்டிய சூழ்நிலை உருவாகக் கூடாது என்பதற்காகவே என்ற விளக்கமும் பலமுறை முன்வைக்கப்பட்டது.
அழிவை ஏற்படுத்தும் வன்முறைக்கு பதிலாக, நீதி, உரிமை, சமூக முன்னேற்றம் மற்றும் ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளே ஒரு சமூகத்தின் எதிர்காலத்தை உருவாக்கும் என்ற பாடத்தையும் விடுதலைப் போராட்ட அனுபவம் வழங்கியதாகப் பலர் கருதுகின்றனர்.
அதனால் தான், அந்தப் போராட்டத்தின் தலைவராக விளங்கிய வேலுப்பிள்ளை பிரபாகரனின் அரசியல் சிந்தனைகள் இன்னமும் விவாதிக்கப்படுகின்றன.
இலங்கை இந்திய ஒப்பந்தம்
1987 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் நாள் இலங்கை அதிபர் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவுக்கும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இடையில் இலங்கை–இந்தியா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இனவன்முறைகளும் தமிழர் அரசியல் நெருக்கடியும் தீவிரமடைந்திருந்த சூழலில் உருவான இந்த ஒப்பந்தத்தின் மூலம் பின்னர் இலங்கை அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது.
இந்தியாவின் பிராந்திய அரசியல் நோக்கங்களும், இலங்கை அரசின் தேவைகளும் இணைந்த சூழலிலேயே இந்த ஒப்பந்தம் உருவானதாக அன்றைய அரசியல் விமர்சனங்கள் சுட்டிக்காட்டின.
இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட ஆறு நாட்களின் பின்னர், யாழ்ப்பாணம் சுதுமலையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுக்கூட்டத்தில் தலைவர் பிரபாகரன் முதன்முறையாக மக்கள் முன்னிலையில் உரையாற்றினார்.
விடுதலைப் போராட்டம் தொடங்கி ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகள் கடந்திருந்த நிலையில், அவரைக் காண ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டதாகக் கூறப்படுகிறது. அன்றைய மக்களின் எழுச்சி, 13 ஆவது திருத்தம் தமிழர் தேசியப் பிரச்சினைக்கான முழுமையான அரசியல் தீர்வாக அமையாது என்ற எதிர்ப்பின் வெளிப்பாடாகவும், தமிழீழ விடுதலை இலட்சியத்தின் மீதான ஆதரவாகவும் விளங்கியது.
சுதுமலைப் பிகடனம்
இன்று, அந்தச் சுதுமலை உரை நிகழ்ந்து 38 ஆண்டுகள் கடந்த நிலையில், அப்போது பிரபாகரன் வெளிப்படுத்திய பல அரசியல் எச்சரிக்கைகளும் மதிப்பீடுகளும் பின்னாளில் நிகழ்ந்த சம்பவங்களின் ஒளியில் மீண்டும் ஆராயப்படுகின்றன.
போருக்குப் பிந்தைய ஆண்டுகளிலும் தமிழர் அரசியல் பிரச்சினைக்கு நிலையான தீர்வு எட்டப்படாத நிலை, 13 ஆவது திருத்தத்தின் வரம்புகள் குறித்து தொடர்ச்சியான விவாதங்களை உருவாக்கியுள்ளது.
இந்தப் பின்னணியில் சுதுமலை உரை மீண்டும் வாசிக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான அரசியல் ஆவணமாகக் கருதப்படுகிறது. அந்த உரையை அவர், "எனது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய தமிழீழ மக்களே…" என்று தொடங்கினார்.
திடீரென ஏற்பட்ட அரசியல் திருப்பத்தை சுட்டிக்காட்டிய அவர், இந்தியாவும் இலங்கையும் தமிழர் மக்களையோ அல்லது அவர்களது பிரதிநிதிகளையோ கலந்தாலோசிக்காமல் ஒப்பந்தத்தை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டார்.
டெல்லிக்கு அழைத்துச் செல்லப்படும் வரை அந்த ஒப்பந்தம் பற்றிய எந்தத் தகவலும் தனக்குத் தெரியாது என்றும், அங்கு சென்ற பிறகே அதன் உள்ளடக்கம் தமக்குக் காட்டப்பட்டதாகவும் விளக்கினார்.
அந்த ஒப்பந்தத்தில் பல சிக்கல்களும் கேள்விக்குறிகளும் இருப்பதாகக் கூறிய அவர், தமிழர் அரசியல் பிரச்சினைக்கு அது நிரந்தரத் தீர்வாக அமையாது என்ற சந்தேகத்தை இந்திய அரசிடம் வெளிப்படையாக எடுத்துரைத்ததாக தெரிவித்தார். இருப்பினும், தாம் ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் உறுதியுடன் இந்திய அரசு இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இந்த ஒப்பந்தம் தமிழர் பிரச்சினையை மட்டுமல்லாது, இந்தியா–இலங்கை உறவுகளையும், இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பு வியூகங்களையும் உள்ளடக்கியதாக இருப்பதால், இந்தியா அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது என்றும் அவர் கூறினார்.
ஆனால், அதே நேரத்தில் தமிழர் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரு விடயத்தில் தமிழர் மக்களின் கருத்து கேட்கப்படாதது ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த ஒப்பந்தம் விடுதலை இயக்கத்தின் அரசியல் இலட்சியத்தையும், போராட்ட வடிவத்தையும், ஆயுதப் போராட்டத்தின் எதிர்காலத்தையும் நேரடியாகப் பாதிப்பதாக அவர் மதிப்பிட்டார்.
பதினைந்து ஆண்டுகளாகப் பல உயிர்த்தியாகங்களாலும் போராட்டங்களாலும் கட்டியெழுப்பப்பட்ட ஒரு இயக்கத்தை மிகக் குறுகிய காலத்தில் நிராயுதபாணியாக்குவது எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் அவர் தெரிவித்தார்.
மக்களின் பாதுகாப்புக்கான உறுதியான உத்தரவாதம் இல்லாத சூழலில் ஆயுதங்களை ஒப்படைக்க முடியாது என்ற நிலைப்பாட்டை ஆரம்பத்தில் எடுத்ததாகவும், பின்னர் ராஜீவ் காந்தியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தமிழர் பாதுகாப்பு குறித்து பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
குறிப்பாக, சிங்கள அரசின் மீது நம்பிக்கை இல்லையென்றாலும், இந்தியப் பிரதமரின் உறுதிமொழிகளில் நம்பிக்கை வைத்து இந்திய அமைதிப்படையிடம் ஆயுதங்களை ஒப்படைக்க முடிவு செய்ததாக அவர் விளக்கினார்.
"நாம் எமது மக்களின் பாதுகாப்புக்காக ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம். அதனுடன் எமது மக்களின் பாதுகாப்புப் பொறுப்பையும் இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம்" என்ற அவரது அறிவிப்பு அன்றைய உரையின் மையச் செய்தியாக அமைந்தது.
இந்தியாவுடன் மோதலைத் தவிர்ப்பதே தமது முடிவின் நோக்கம் என்றும், இனிமேல் ஈழத் தமிழரின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் இந்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதேவேளை, இந்த ஒப்பந்தம் தமிழர் தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை வழங்காது என்றும், சிங்கள இனவாத அரசியல் இறுதியில் இந்த ஒப்பந்தத்தை செயலிழக்கச் செய்யும் என்றும் அவர் எச்சரித்தார்.
தமிழீழத் தனியரசே தமிழர் அரசியல் பிரச்சினைக்கான நிலையான தீர்வாகும் என்ற தனது நம்பிக்கையை அவர் வெளிப்படையாக மீண்டும் வலியுறுத்தினார். போராட்டத்தின் வடிவங்கள் மாறக்கூடும்; ஆனால் அதன் இலட்சியம் மாறாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் இடைக்கால நிர்வாகம் அல்லது தேர்தல் அரசியலில் இயக்கம் பங்கேற்க வேண்டிய சூழல் ஏற்பட்டாலும், தனிப்பட்ட முறையில் எந்தத் தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்; முதலமைச்சர் பதவியையும் ஏற்க மாட்டேன் என்று அவர் அன்றே உறுதியாக அறிவித்தார்.
வரலாறு ஆகிய பிரகடனம்
அன்றைய உரையில் வெளிப்பட்ட இந்த நிலைப்பாடுகள் பின்னாளில் "சுதுமலைப் பிரகடனம்" என்ற பெயரில் அரசியல் வரலாற்றில் தனித்த இடத்தைப் பெற்றன.
வல்லரசுகளின் அழுத்தங்களுக்கும் அதிகார அரசியலுக்கும் மத்தியில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய ஒரு முக்கிய அரசியல் அறிக்கையாகவே அது நினைவுகூரப்படுகிறது.
இன்றும் பல ஈழத் தமிழர்களின் நினைவில் தேசிய அரசியல் வரலாற்றின் முக்கியமான தருணங்களில் ஒன்றாக சுதுமலைப் பிரகடனம் இடம்பெற்றுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட அரசியல் பரிமாணங்களைப் புரிந்துகொள்ளவும், 1987 ஆம் ஆண்டின் வரலாற்றுத் திருப்பத்தை மதிப்பிடவும் அவசியமான ஆவணமாக அந்த உரை தொடர்ந்து வாசிக்கப்படுகிறது.
ஆகவே, ஆகஸ்ட் 4 ஆம் நாளும் சுதுமலைப் பிரகடனமும் ஈழத் தமிழ் அரசியல் நினைவில் நீங்கா இடத்தைப் பெற்ற வரலாற்றுச் சின்னங்களாகவே தொடர்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |