ஹட்டன் வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற கோர விபத்து : அறுவர் படுகாயம்!
ஹட்டன் (Hatton) - மஸ்கெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த ஆறு பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
டிக்கோயா நகருக்கு அருகில், முச்சக்கர வண்டியொன்று தனியார் பேருந்துடன் மோதியதில் நேற்றிரவு (16) இந்த விபத்து ஏற்பட்டது.
இதன் போது முச்சக்கர வண்டியில் பயணித்த ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆறு பேர் படுகாயம்
அவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த மூன்று பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஹட்டனில் இருந்து ஹட்டன் லெதண்டி தோட்டத்திற்கு பயணித்த முச்சக்கர வண்டியின் சாரதி அதிக அளவில் மதுபோதையில் இருந்ததாக தெரியவந்துள்ளது.
13 வயது மாணவன் உட்பட அவரது நான்கு நண்பர்களை ஏற்றிக்கொண்டு, அதிவேகமாக முச்சக்கர வண்டியை சாரதி செலுத்திய போது, எதிர் திசையில் மஸ்கெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்துடன் முச்சக்கரவண்டி மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதியை ஹட்டன் காவல்துறையினர் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
