தமிழக கடற்றொழிலாளர்கள் 9 பேர் சிறிலங்கா கடற்படையினரால் கைது
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒன்பது இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.
நெடுந்தீவு அருகே நேற்று(19) இரவு தமிழக கடற்றொழிலாளர்களின் படகு இருந்த போது அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட சிறிலங்கா கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த ஒன்பது கடற்றொழிலாளர்களையும் கைது செய்தனர்.
விடுதலை செய்ய வாய்ப்பு
கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களை மயிலிட்டி அழைத்து வந்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இயந்திர பழுது காரணமாக படகு கரை ஒதுங்கியுள்ளதால் உயர் அதிகாரிகள் அனுமதி அளித்தால் படகையும் மீனவர்களையும் விடுதலை செய்ய வாய்ப்பு உள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நேற்று மேலுமொரு படகும் வெறுமையாக கரை ஒதுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த படகு தொடர்பிலும் கடற்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
