சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகளுக்கு தேரர் புத்திமதி
மதத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாட்டுக்கான அரசியல் யாப்பினை உருவாக்க முடியாது எனத் தெரிவித்துள்ள சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர், அவ்வாறு உருவாக்கப்படும் யாப்பு ஜனநாயக நாட்டுக்கான அம்சங்களை கொண்டிருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகள் ஒரே நாடு, ஒரே சட்டம் செயலணிக்கு தமது ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை வழங்காதிருப்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் எனவும், எனினும் இது அவர்கள் சார்பு மக்களுக்கு இழைக்கும் துரோகம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தென்னிலங்கையின் பௌத்த அமைப்பான சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட குழுவினர் நேற்றைய தினம் ஒரே நாடு, ஒரே சட்டம் செயலணிக்கு தமது ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை வழங்குவதற்காக சென்றிருந்ததோடு, பின்னர் ஊடகங்களுக்கும் கருத்து வெளியிட்டனர்.
இதன்போது, ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோட்பாட்டை முன்னெடுப்பதற்கு அமைக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி செயலணி ஒற்றுமை இன்மையையும், பிரிவினையையும் ஏற்படுத்தக்கூடிய பாரிய ஆபத்தைக் கொண்டிருப்பதால் அதனை திட்டவட்டமாக நிராகரிப்பதாக சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்த விடயம் குறித்து ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளிக்கும்போதே அக்மீமன தயாரத்ன தேரர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் பதிலளித்த அவர்,
“கருத்து வெளியீட்டு சுதந்திரம் யாருக்கும் உண்டு, வற்புறுத்தலின் பேரில் கருத்துக்களை வெளியிடக் கோர முடியாது.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சார்பில் தெரிவான பிரதிநிதிகள் இருக்கின்றார்கள். அவர்கள் அவர்களின் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செயற்படாமல் இருப்பது அவர்களின் தவறு. அனைவரும் இணைந்துதான் இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும்.
இன்று காணப்படும் வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் காணப்படும் இல்லாமல் போகும் பட்சத்தில், தீவிர கொள்கைகள் மாற்றமடையும்போது அவர்களுக்கு வேதனையளிக்கலாம். இதனால் அவர்கள் இதில் பங்கேற்மால் இருக்கலாம்.
அவ்வாறான ஒரு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் இதில் பங்கேற்காமல் இருப்பதால், காணப்படுகின்ற சட்டத்தை பின்பற்ற வேண்டிய அவசியம் ஏற்படும்.
உதாரணமாக இந்த நாட்டில் வாழும் சிங்கள தமிழ் மக்களுக்கு ஒருவர் ஒருவரை மாத்திரமே திருமணம் முடிக்க முடியும். எனினும் முஸ்லிம்கள் பலரை திருமணம் முடிக்கின்றனர். 13 வயது சிறுமியை அவர்கள் திருமணம் செய்கின்றார்கள். இது மிக ஆபத்தான விடயம். இதனை மாற்றியமைத்து அரசியமைப்பை மாற்றியமைக்க வேண்டும். இல்லாவிடின், இது பழங்குடி சட்டமாகவே மாறும்.
மதத்தின் அடிப்படையில் யாப்பினை உருவாக்க முடியாது. இது பழங்குடி சட்டமல்ல, அனைவருக்கும் சமமான வாய்ப்புக்களை வழங்கும் வகையிலான ஜனநாயக யாப்பாக இது அமைய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.