இறுதிக் கட்டத்தில் ஜனாதிபதி மாளிகைக்குள் நடந்தது என்ன? பகிரங்கப்படுத்திய ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி
தனது காலணிகளை கூட அணிய முடியாத சூழ்நிலையில் தான் வெளியேற்றப்பட்டதாக ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான்கள் நுழைந்ததும் அந்நாட்டு ஜனாதிபதி அஷ்ரப் கனி தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பி ஓடினார்.
இந்நிலையில், அவர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சமடைந்துள்ளார். இக்கட்டான சூழ்நிலையில் ஆப்கானிஸ்தானை விட்டு தப்பிச்சென்ற ஜனாதிபதி அஷ்ரப் கனி மீது பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதனையடுத்து ஐக்கிய அமீரகத்தில் தஞ்சமடைந்துள்ள அஷ்ரப் கனி தனது சமூகவலைதள பக்கம் மூலம் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அஷ்ரப் கனி குறிப்பிட்டுள்ளதாவது,
எனது காலணிகளை கூட அணிய முடியாத சூழ்நிலையில் நான் வெளியேற்றப்பட்டேன். உள்ளூர் மொழி பேசத்தெரியாதவர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து என்னை தேடினர்.
நான் வெளியேற்றப்பட்டேன். இந்த நிகழ்வுகள் மிகவும் வேகமாக நடைபெற்றுவிட்டது. தலிபான்களை உள்ளடக்கிய அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பாக கலந்து ஆலோசிக்க நான் எண்ணினேன்.
அரசின் முன்னாள் அதிகாரிகள் மற்றும் தலிபான்கள் இடையேயான பேச்சுவார்த்தைக்கு நான் ஆதரவு அளிக்கிறேன். நான் மீண்டும் ஆப்கானிஸ்தான் திரும்புவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.