உலகில் பல இடங்களில் “ஒமிக்ரோன்” பரவி விட்டது! பீதியை கிளப்பும் தென் ஆபிரிக்கா
ஒமிக்ரோன் வைரஸ் ஏற்கனவே உலகின் பல பகுதிகளுக்கு பரவிவிட்டதாக தென் ஆபிரிக்க சுகாதாரத்துறை மந்திரியை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
50 பிறழ்வுகளைக் கொண்டுள்ள கொரோனா வைரசான ‘ஒமிக்ரோன்’ தென் ஆபிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வகை ஒமிக்ரோன் வைரஸ் காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் தென் ஆபிரிக்கா உள்பட ஆபிரிக்க நாடுகளுடனான விமான போக்குவரத்தை இரத்து செய்துள்ளன.
வேகமாகப்பரவக் கூடிய டெல்டா வகை கொரோனா மற்றும் பிற வகை கொரோனா வைரசுடன் ஒப்பிடும் போது இந்த ஒமிக்ரோன் வைரஸ் அதிக வேகமாக பரவும் அல்லது அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உறுதி செய்ய இதுவரை எந்தவித தரவுகளும் இல்லை.
ஒமிக்ரோன் வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துமா? என்பது குறித்து இதுவரை தெரியவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தங்கள் நாடு மீது பிற உலக நாடுகள் பயணக்கட்டுப்பாடுகளை விதித்துள்ளதற்கு தென் ஆபிரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தென் ஆபிரிக்க சுகாதாரத்துறை மந்திரி தெரிவிக்கையில்,
தென் ஆபிரிக்க நாடுகளுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எதிர்பாராத ஒன்று மற்றும் நமது பொருளாதாரத்தையும் இது பாதிக்கும்.
எங்கள் நாடு மீது கட்டுப்பாடுகள் விதித்துள்ள நாடுகள் அறிவியலை பின்பற்றி அவர்களது முடிவுகளை மறு ஆய்வு செய்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். ஒமிக்ரான் வைரஸ் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்கனவே பரவிவிட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.