சொகுசு வாகனக் கடத்தல் மோசடி: முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மகன் மீது பாயும் CID விசாரணை
முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மகன் சம்பந்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் பெரும் மதிப்புமிக்க சொகுசு வாகனக் கடத்தல் மோசடி குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) விசேஷ விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், அந்த முன்னாள் ஜனாதிபதி யார் அல்லது இதில் தொடர்புடைய நபர் யார் என்ற விபரங்களை அந்தச் செய்தி அறிக்கை வெளிப்படுத்தவில்லை என தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த அரசாங்கங்களின் ஆட்சிக் காலங்களின் போது சுங்க வரியைச் செலுத்தாமல் ஏமாற்றி பல மில்லியன் ரூபா பெறுமதியான சொகுசு வாகனங்கள் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல வாகனங்கள்
பல வாகனங்கள் கப்பல் கொள்கலன்களுக்குள் (Shipping containers) மறைத்து வைக்கப்பட்டு நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாகவும் அவற்றில் சில வாகனங்கள் அரசியல் செல்வாக்குமிக்க நபர்களின் பிள்ளைகளால் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கை குற்றஞ்சாட்டியுள்ளது.

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (RMV) ஊழல்வாதிகளான சில அதிகாரிகளின் உதவியுடன் இந்த வாகனங்களில் சிலவற்றுக்கு முறைகேடாகப் பதிவு எண்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத வாகனங்களைப் பறிமுதல் செய்வதற்குப் பதிலாக அவற்றுக்கான சுங்க வரிகள் பின்னொரு நாளில் செலுத்தப்பட்ட சில சம்பவங்களையும் புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தொடர் விசாரணைகள்
அவ்வாறு கடத்தப்பட்ட ஒரு வாகனத்தைக் கடந்த காலத்தில் கைப்பற்றிய சிஐடியினர், அதனை இலங்கை சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளதுடன் அது தற்போது சுங்கக் காவலில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடர் விசாரணைகளின் ஒரு பகுதியாக சம்பந்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் மகனை அடுத்த வாரம் வாக்குமூலம் வழங்குவதற்காகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) அழைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், இந்த விசாரணை குறித்து காவல்துறையினரோ அல்லது குற்றப்புலனாய்வுத் திணைக்களமோ இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |