நீண்ட காலத்திற்கு பின்னர் உற்சாகத்தில் கோட்டாபய....! பின் வாசல் வழியாக நுழையும் முக்கிய நபர்
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச நீண்ட காலத்திற்குப் பின்னர் உற்சாகமாக இருப்பதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த வாரம், அரச தலைவரின் மாளிகையில் தமது தற்காலிக அலுவலகத்தில் பணிபுரியும் போது அவர் உற்சாகமான மனநிலையில் இருந்ததாகவும் குறித்த வாராந்த செய்தித்தாள் தகவல் வெளியிட்டுள்ளது.
காரணம் என்ன?
தற்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொருளாதார நெருக்கடி தொடர்பில் தீவிரமாக செயலாற்றிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில், தன் மீதான விமர்சனங்கள் தொடர்பான கவனம் திசை மாறியுள்ளதாக எண்ணி அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இவ்வாறு உற்சாக மனநிலையில் இருந்திருக்கலாம் என்றும் அந்த பத்திரிகை சுட்டிக்காட்டியிருக்கிறது.
அது மாத்திரமல்லாது, கோட்டாபய பணிபுரியும் அலுவலகத்தில் அவருடைய தனிப்பட்ட பணியாளர்கள் மாத்திரமே செயற்படுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
இதுவொருபுறமிருக்க, அரச தலைவரின் மாளிகையை ஆர்ப்பாட்டக்கார்கள் ஆக்கிரமித்துள்ளமையால், கோட்டாபயவின் செயலாளர் காமினி செனரத், பின்பக்க வாசலின் ஊடாகவே செயலகத்துக்குள் சென்று வந்தார் என்றும் அந்த செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
பொருளாதார பேரழிவை எதிர்வு கூறிய ரணில்
இதேவேளை பொருளாதாரப் பேரழிவு தாம் எதிர்பார்த்ததை விட மிக மோசமானதாக இருக்கும் என்று பிரதமர் கூறியிருப்பதற்கான அர்த்தத்தை செய்தித்தாள் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தநிலை ஜூலை பிற்பகுதியில் அல்லது ஆகஸ்ட் தொடக்கத்தில் இந்த நெருக்கடி தீவிரமடையும் என்பதை கொண்டே ரணிலின் கருத்து வெளியாகியுள்ளதாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது.
இதற்கிடையில் இந்தியாவின் எதிர்பார்த்த எரிபொருள் கையிருப்பு வந்து தீர்ந்துவிட்டால், விநியோகத்தை உறுதி செய்ய அரசாங்கத்தால் நிதி திரட்ட முடியுமா என்பதுதான் கேள்வி. இது பேரழிவு நிலைமையை கொண்டு வரும். இதை மோசமாக்கினால், அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.
கடனில் பெறப்பட்ட உரங்களை விவசாயிகளுக்கு வழங்கினாலும், அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குப் பிறகே அறுவடையை எதிர்பார்க்க முடியும். எனவே, இந்த ஆண்டு அக்டோபர் முதல் அடுத்த ஆண்டு பெப்ரவரி வரை நெல் விளைச்சல் இல்லை. இதனால் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டி வரும்.
எனினும் அதற்கு அன்னியச் செலாவணி நாட்டில் இல்லை. இதனால், மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது.
இதனையடுத்தே உதவிக்காக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பை இலங்கை அரசாங்கம் அணுகியுள்ளதாகவும் அந்த பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.
