திரைமறைவில் நடந்த டீல் - திமுக ஆதரவோடு முதல்வராக எடப்பாடி - அம்பலப்படுத்திய சி.வி.சண்முகம்
அதிமுக எப்போதும் உடையாது என்றும் திமுக ஆதரவோடு எடப்பாடி பழனிசாமி முதல்வராக முயற்சித்தார் என அதிமுகவின் சி.வி.சண்முகம் பரபரப்பு குறிறச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சென்னையில் இன்று () நடந்த செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே சி.வி.சண்முகம் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி தோல்வி அடைந்திருக்கிறது. இதனை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம்.
இணைவு வேண்டாம்
தேர்தல் தோல்விக்கு பின்னர் ஒரு சில முன்மொழிவுகளை எடப்பாடி பழனிசாமி முன்வைத்தார். அதனை கேட்டு நாங்கள் அதிர்ச்சிக்கு உள்ளானோம்.

திமுக தன்னை முதலமைச்சராக ஆதரிக்க தயாராக இருக்கின்றது என்று அவர் கூறினார். இது எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இந்த இணைவு வேண்டாம் என்று கூறினோம். ஆனால், இதை ஏற்க மறுத்துவிட்டார்.
திமுக-வை எதிர்த்து தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக. 53 ஆண்டுகளாக இதையே செய்து வருகிறோம். திமுக-வுடன் இணைந்தால் அதிமுக இல்லாமல் போய்விடும்.
அதிமுக-வை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்திலும், புத்துயிர் கொடுக்கப்பட வேண்டிய நிலையிலும் நாங்கள் இருக்கிறோம்.
இதனை தொடர்ந்து அதிமுக-வின் பெரும்பான்மை எம்எல்ஏ-க்கள் கூடி, எடப்பாடி பழனிசாமி ஆதரவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினோம். தவெக தலைவர் விஜய்-க்கு மக்கள் வாக்களித்துள்ளனர்.
விஜய்யை ஆதரிப்பதாக தீர்மானம்
மக்கள் தீர்ப்பை ஏற்று தவெக தலைவர் விஜய்-யை ஆதரிப்பதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கட்சியின் தொடர் தோல்விக்கான காரணங்களை முழுமையாக ஆராய, கட்சியின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல பொதுக் குழுவை கூட்ட நாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேண்டும், கூட்டுவார் என நம்புகிறோம்.
தோல்விக்கான காரணங்களை கண்டறிந்து மீண்டும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி அமைய அனைவரும் ஒன்றிணைந்து பேசி முடிவெடுக்க பொதுக்குழுவை கூட்ட வேண்டும்.
அதிமுக இனி எந்த கூட்டணியிலும் இல்லை. அதிமுக தற்போது புதிய முடிவை எடுக்க வேண்டும் இந்த கட்சி காப்பாற்றப்பட வேண்டும்" என்றார்.
தற்காலிக சபாநாயகரிடம் கடிதம்
இதேவேளை, சட்டமன்ற குழுவின் தலைவராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கட்சியின் கொறடாவாக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், சட்டமன்ற துணைத் தலைவராக எம்எல்ஏ ஹரி, செயலாளராக முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து முறைப்படி தற்காலிக சபாநாயகரிடம் கடிதம் வழங்கியுள்ளோம்" என்று அவர் கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |