இலங்கையில் நீக்கப்படும் பயணக் கட்டுப்பாடு! பொலிஸார் வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்
பயணத்தடை நடைமுறை அகற்றப்பட்ட காலப்பகுதியில் மக்களின் செயற்பாட்டைக் கண்காணிக்க விசேட பொலிஸ் குழு களத்தில் இறக்கப்பட்வுள்ளதாக பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
நாளைய தினம் அதிகாலை நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை சுகாதார தரப்பின் அறிவித்தலுக்கு அமைய தளர்த்தப்படுகின்றது.
கடைகள், பல்பொருள் அங்காடிகள் நாளை திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும் வாடிக்கையாளர்கள் சுகாதார நடைமுறையினை உரிய வகையில் கையாள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் வாடிக்கையாளர்கள் கைகழுவுவதற்கும், அவர்களின் உடல் வெப்பத்தை கணிப்பதற்கும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் மக்கள் முக கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியினையும் பேண வேண்டும்.
சுகாதார நடைமுறைகளை பின்னபற்றாத நிறுவனங்களுக்கு எதிராக களத்தில் இறக்கப்படும் புதிய காவல்துறை பிரிவு உரிய சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ளும். பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகள், நடத்துனர்கள் உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவதுடன் பேருந்தின் இருக்கைக்கு அமைய பயணிகளை ஏற்ற வேண்டும் என கேட்கப்படுகிறார்கள்.
இது தொடர்பில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கூட்டங்கள், வைபவங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் செயலமர்வுகளுக்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.