சகல பிரஜைகளும் சமமாக நடத்தப்படும் சகாப்தம் உருவாக்கப்படும் - சஜித் பிரேமதாச
தென்னிலங்கை மக்களின் அடிப்படை குறைபாடுகள் போலவே வடக்கு மக்களின் அடிப்படை குறைபாடுகளும் நிவர்த்தி செய்யப்பட்டு நாட்டின் சகல பிரஜைகளும் சமமாக நடத்தப்படும் சகாப்தம் உருவாக்கப்படும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (23) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
புதிய சகாப்தம்
“இன்று பலர் மனித உரிமைகள் பற்றி பேசினாலும் அதை சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்குள் மட்டுமே பேசுகிறார்கள். ஆனால் அதில் பொருளாதாரம், சமூகம்,கலாசாரம், கல்வி மற்றும் சுகாதார உரிமைகள் இதில் அடங்கியிருக்க வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ஒரு மனித உரிமையுடன் மாத்திரம் மட்டுப்படாமல் சகல மனித உரிமைகளையும் பலப்படுத்த தீர்மானித்துள்ளோம்.
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில், ஒரு இனம் ஒரு மதம் பிரதானமாக இருக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் சகல இனங்களையும் மதங்களையும் முன்னிலைப்படுத்தும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
ஒரு தாய் தந்தையின் பிள்ளைகளாக நாட்டைக் கட்டியெழுப்பும் பணிக்கு மீண்டும் புத்துயிரழிக்கப்படும்.
வடக்கிலும் தெற்கிலும் பாரிய அபிவிருத்தி சகாப்தத்தை உருவாக்க ஒரு கட்சியாகவும் அரசியல் இயக்கமாகவும் நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.
பொது மக்களின் வாழ்க்கையைப் பலப்படுத்துவதற்குத் தேவையான சகல பலத்தையும் ஐக்கிய மக்கள் சக்தி வழங்கும்
சொந்தக் காலில் நிற்கும் வாய்ப்பு
நாட்டின் குடிமக்கள் அரசாங்கத்தின் அடிமைகளாக அல்லாமல் சொந்தக் காலில் நிற்கும் வாய்ப்பு பெற்றுத் தரப்படும். சுதந்திரமான நாட்டில் திருப்தியாக வாழும் குடிமக்களை உருவாக்குவதே திட்டம்.
உலகின் ஏனைய நாடுகள் புதிய தொழில்நுட்பத்துடன் முன்னோக்கிச் செல்லும் போது,சமீபகாலமாக
இனவாதத்தாலும்,மதவாதத்தாலும் எமது நாடு பின்னோக்கி வருகின்ற போதும், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அந்த இனவாத, மதவாத சிந்தனைகள் அனைத்தும் கைவிடப்பட்டு, நாட்டின் முன்னோக்கிய பயணத்திற்கு சகலரின் பங்கேற்பை பெற்றுக்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
