சர்வகட்சி அரசாங்கத்தில் அதிபர் - சஜித், பிரதமர் - அநுர : பெயர்கள் பரிந்துரை
சர்வகட்சி அரசாங்கத்தில் புதிய அதிபராக சஜித் பிரேமதாசவும், பிரதமராக அநுர குமார திஸநாயக்கவும் நியமிக்கப்பட வேண்டும் என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம், அகில இலங்கை மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவற்றின் தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார்.
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் விசேட அதியுயர் பீட கூட்டம் கல்முனையில் உள்ள தலைமை செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.
இதைத் தொடர்ந்து மாலை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கை வரலாற்றில் பொன்னான நாள்
“இன்று இலங்கை வரலாற்றில் மிக மிக பொன்னான நாள். மக்கள் போராட்டம் வெற்றி பெற்ற மகத்தான தினம். இம்மகிழ்ச்சியில் நாமும் பங்கேற்கின்றோம்.
மக்கள் போராட்டத்தின் மூலம் சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ விரட்டி அடிக்கப்பட்டுள்ளார். புதிய அதிபர், புதிய பிரதமர் ஆகியோர் நியமிக்கப்படுதல் வேண்டும்.
நாம் அடையாளம் கண்ட வகையில் சஜித் பிறேமதாச, அனுரகுமார திஸநாயக்க ஆகிய இருவரும் இந்நாட்டை தலைமை ஏற்று நடத்துவதற்கு மிக மிக பொருத்தமானவர்கள். சஜித் அதிபராகவும், அனுர பிரதமராகவும் நியமிக்கப்பட வேண்டும் என்று நாம் முன்மொழிகின்றோம்.
ரணில் விக்ரமசிங்க உடனடியாக பிரதமர் பதவியில் இருந்து விலகி வழி விட வேண்டும்.
வடகிழக்கிலும் இவ்வாறான மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்
இந்த அரசாங்கத்தை தீர்மானிக்கின்ற சக்திகளாக போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் இருந்து இயங்குதல் வேண்டும். அதே போல் வடகிழக்கிலும் இவ்வாறான மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
வடகிழக்கு மக்கள் தொடர்ந்து ஏமாற்றி வருகின்ற குறுகிய, சுய இலாப தலைமைகளை விரட்டி அடிக்க வேண்டும். விக்னேஸ்வரனும் ஒன்றுதான், சம்பந்தரும் ஒன்றுதான். எமது மக்கள் புதிய தலைமையின் கீழ் பயணிக்க வேண்டும்” என்றார்.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 15 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்