சிறிலங்காவுடனான அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்த பசில் - தவிக்கும் சகாக்கள்!
அமெரிக்கா செல்வதற்கு முன், பசில் ராஜபக்ச தனக்கு மிக நெருக்கமான குழுவை அமைச்சரவையில் சேர்ப்பதற்காக மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், குறிப்பிட்ட காலத்துக்கு அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகி இருப்பதற்கு பசில் ராஜபக்ச தீர்மானித்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறான நிலையில், அமெரிக்கா சென்ற முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சிறிலங்காவுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
தனியாக வசிக்கும் பசில்
அத்துடன் அனைத்து விதமான சிறிலங்கா தொடர்பான செயற்பாடுகளையும் விட்டு விலகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவர் தனது தொலைபேசி எண்ணைக்கூட மாற்றி அமெரிக்காவில் தனியாக வசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பசில் ராஜபக்சவுடன் நெருக்கமாக பணியாற்றுபவர்கள் கூட அவரைத் தொடர்பு கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கோட்டாபய ராஜபக்ச பதவியை விட்டு வெளியேறி புதிய அதிபரை நியமித்ததன் மூலம் ராஜபக்ச குடும்பத்திலும், பசில் ராஜபக்சவின் கட்சியாக இருந்த பொதுஜன பெரமுனவிலும் சில நெருக்கடிகள் உருவாகின.
பெரமுன மீண்டும் எழுச்சி பெற வேண்டும்
பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் பெற்றுக் கொடுப்பதற்காக பசில் ராஜபக்ச கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. ஆனால் தற்போதைய அமைச்சரவையில் பெரும்பான்மையானவர்கள் பசில் ராஜபக்சவுக்கு நெருக்கமானவர்கள் அல்ல.
எப்படியிருப்பினும் பசிலால் நீண்ட காலம் அரசியலில் இருந்து விலகி இருக்க முடியாது எனவும், ராஜபக்ச குடும்பமும், பொதுஜன பெரமுனவும் மீண்டும் எழுச்சி பெற வேண்டுமாயின் பசிலின் தலையீடு கட்டாயம் எனவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.