கனடாவை நோக்கி படையெடுக்கும் அமெரிக்க செவிலியர்கள்...!
நூற்றுக்கணக்கான அமெரிக்கச் செவிலியர்கள் பாதுகாப்பான பணிச்சூழலைத் தேடி கனடாவை நோக்கி இடம்பெயரத் தொடங்கியுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அதிரடி நடவடிக்கைகள் மற்றும் மருத்துவத் துறைக்கான நிதிக்குறைப்பு காரணமாக இவ்வாறான சூழல் உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜனவரி மாதம் 24-ஆம் திகதி மினியாபோலிஸில் (Minneapolis), ட்ரம்பின் புலம்பெயர்தல் கொள்கைகளுக்கு எதிராகப் போராட்டமொன்று இடம்பெற்றது.
அமெரிக்க அதிகாரிகள்
இதில் கீழே விழுந்த பெண்ணைக் காப்பாற்ற முயன்ற அலெக்ஸ் ப்ரெட்டி என்ற செவிலியர் அமெரிக்க அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரை ஒரு உள்ளூர் பயங்கரவாதி என ட்ரம்ப் நிர்வாகம் முத்திரை குத்த முயன்றதாகத் தெரிவித்து சமூக ஊடகங்களில் காணொளிகள் வெளியாகி சர்ச்சைக்குள்ளாகி இருந்தது.
இந்தச் சம்பவம் அமெரிக்க மருத்துவப் பணியாளர்களிடையே பெரும் அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
ட்ரம்ப் நிர்வாகம்
ஏற்கனவே பொது மருத்துவம் மற்றும் காப்பீட்டுத் திட்டங்களுக்கான நிதியை ட்ரம்ப் குறைத்துள்ள நிலையில் இந்த வன்முறைச் சம்பவமும் சேர்ந்து செவிலியர்களை வெளியேறத் தூண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் மட்டும் சுமார் 1000 அமெரிக்கச் செவிலியர்களுக்குப் பணி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 2028 ஆம் ஆண்டளவில் அமெரிக்காவில் 2.7 இலட்சம் செவிலியர்களுக்குப் பற்றாக்குறை ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில் சொந்த நாட்டுப் பணியாளர்களே அண்டை நாட்டை நோக்கித் தஞ்சம் புகுவது ட்ரம்ப் நிர்வாகத்தின் மீதான பெரும் விமர்சனமாக உருவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |