ஈழத்தமிழ் மாணவன் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவன போட்டியில் சாதனை
“சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை, இகல்வெல்லல் யார்க்கும் அரிது” என்ற திருக்குறளுக்கு இலக்கணமாக ஒரு ஈழத் தமிழ் மாணவன் சர்வதேச அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளார்.
போருக்குள் பிறந்து, வளர்ந்து தாய் நிலத்தில் இருந்து அகதியாக தத்தளித்துச் சென்ற இந்த மாணவனின் சாதனை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் கல்வி கற்றுவரும் ஈழத்தமிழ் மாணவனான விஜேந்திரகுமார், மேனகா தம்பதிகளின் புதல்வனான அர்ச்சிகன் அமெரிக்காவில் உள்ள விண்வெளி குறித்த நிறுவனமான National Space Society (NSS) சர்வதேச ரீதியாக மாணவர்களிடையே நடாத்திய போட்டியில் வெற்றி பெற்று ஈழத்தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
ஈழத்தமிழ் மாணவன்
விண்வெளியில் மனிதர்களைக் குடியமர்த்தும் போது பின்பற்ற வேண்டிய அறிவுசார் நுட்பங்களை உள்ளடக்கி, அவரது சிந்தனையில் உருவான செயற்றிட்டம் வெற்றி பெற்றுள்ளதாக NATIONAL SPACE SOCIETY (NSS) அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் 19 நாடுகளில் இருந்து 26725 பேர் பங்கேற்ற நிலையில், ஈழத்தமிழ் மாணவனான விஜேந்திரகுமார் அர்ச்சிகன் அனுப்பிய செயற்றிட்டத்தை NSS அங்கீகரித்து, அவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் (Texas) மாநிலத்தில் NSS அமைப்பின் தலைமையில் இந்த மாதம் இடம்பெறும் அறிவியல் மாநாட்டிற்கும் அவர் அழைக்கப்பட்டிருப்பதுடன், அங்கு உரையாற்றும் வாய்ப்பினையும் பெற்றுள்ளார்.
இன்று சாதனை மாணவனாக பாராட்டுப் பெறும் அர்ச்சிகன் தாயகத்திலிருந்து தனது பெற்றோரோடு அனைத்தையும் இழந்து, வலிகளை மட்டுமே சுமந்து கொண்டு, அகதியாக இந்தியாவிலே தஞ்சமடைந்திருந்தார்.
இம் மாணவனின் சாதனை எந்தச் சூழலிலும் சாதிக்க முடியும் என்பதற்கு சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினரிடமிருந்து அர்ச்சிகனுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 4 நாட்கள் முன்
