தொல்பொருள் திணைக்கள பதில் பணிப்பாளருக்கு ரணில் விடுத்துள்ள உத்தரவு
இலங்கையின் முதல் குடியேற்றம் என்று கூறப்படும் மல்வத்து ஓயா, மகா விகாரை பிரதேசம் மற்றும் சீதாவக்க இராச்சியத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தொல்பொருள் ஆய்வுகளை ஆரம்பிக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க தொல்பொருள் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஆகியோரின் கோரிக்கைக்கு அமைய அதிபர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
தொல்பொருள் எச்சங்கள் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய இடங்கள்
இந்த பகுதிகளில் தொல்பொருள் எச்சங்கள் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய இடங்களை மீளாய்வு செய்து அடையாளம் காண அதிபர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாகவும், அதன் பிரகாரம் தொல்பொருள் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் இதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அதிபர் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
திருகோணமலை திரியாய் விகாரை
திருகோணமலை திரியாய் விகாரைக்கு அருகிலுள்ள துறைமுகம், அதனைச் சுற்றியுள்ள குடியிருப்புகள் மற்றும் திரியாயிலிருந்து ஹொரவப்பொத்தானை வரையிலான நீர் மற்றும் நிலப் பாதை ஆகியவற்றின் விரிவான ஆய்வுகள் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
மேலும், கோட்டை இராச்சியத்தின் இடிபாடுகளை மீளவும் ஆராயுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும், அந்த காணி ஏற்கனவே அதிகளவான மக்கள் வசிப்பிடமாக உள்ளதால் அது சாத்தியமாகவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
