சட்டத்தரணியின் படுகொலை! ஆளும் கட்சி சட்டத்தரணிகள் வெளியிட்ட அறிவிப்பு
ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தியுடன் தொடர்புடைய சட்டத்தரணிகள், சட்டத்தரணி புத்திக மல்லவாராச்சி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ளனர்.
பெப்ரவரி 15 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், பெப்ரவரி 13 அன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மல்லவாராச்சி மற்றும் அவரது மனைவியின் மரணம் தொடர்பாக ஆழ்ந்த இரங்கலை அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலை “மிகவும் கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற தாக்குதல்” என விவரித்த சட்டத்தரணிகள், இது கடந்த காலத்தில் உருவானதாக கூறப்படும் “பரா-ஸ்டேட்” எனப்படும் வன்முறை கலாச்சாரத்தின் மீதமுள்ள தாக்கங்களை உடைத்தெரிய வேண்டிய அவசியத்தை வெளிப்படுத்துகிறது என கூறியுள்ளனர்.
சட்டத்தின் ஆட்சி
அத்தோடு, இந்த வகை வன்முறைகளின் இலக்கு பத்திரிகையாளர்கள், காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள் அல்லது சட்டத்தரணிகள் என மாறுபடக்கூடும் என்றும், பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் உறுதி செய்வது அரசின் பொறுப்பு என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், விசாரணைகளை விரைவுபடுத்தி, இதுபோன்ற குற்றங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு அதிகாரிகளிடம் ஆளுங்கட்சி சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.
இந்நிலையில், அனைத்து குடிமக்களின் கண்ணியமும் பாதுகாப்பும் காக்கப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக சம்பந்தப்பட்ட சட்டத்தரணிகள் கூறியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |