செம்மணி அச்சத்தில் பின்வாங்கும் அநுர அரசாங்கம்! சிறீதரன் குற்றச்சாட்டு
யாழ்ப்பாணம் - சிந்துப்பாத்தி இந்து மயானம் என்பது தமிழ் மக்களின் எலும்புகள் விதைக்கப்பட்டுள்ள, இனப்படுகொலையின் வாயிலாகவே இன்று உலகுக்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
செம்மணி மனிதப் புதைக்குழி மற்றும் ஏனைய மனிதப் புதைகுழிகள் குறித்து மரண தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்ச குறிப்பிடும் விடயங்களை ஆராய்ந்தால் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள், உயர் அதிகாரிகளை கைது செய்ய நேரிடும் என்ற அச்சத்தில் அரசாங்கம் இருப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது குறித்து தென்னிலங்கை பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட சிறீதரன்,
சிந்துப்பாத்தி இந்து மயானம்
“யாழ்ப்பாணம் - சிந்துப்பாத்தி இந்து மயானம் என்பது தமிழ் மக்களின் எலும்புகள் விதைக்கப்பட்டுள்ள, இனப்படுகொலையின் வாயிலாகவே இன்று உலகுக்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இந்த பகுதியில் பெருமளவிலான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்கள் என்பதை மரண தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்ச கைது செய்யப்பட்ட காலப்பகுதியில் குறிப்பிட்டிருந்தார்.
மரண தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்ச, செம்மணிச் சந்தியில் உள்ள கோயிலுக்கு முன்புறத்திலும், நல்லூருக்குச் செல்லும் பாதையிலும் மனித உடல்கள் புதைக்கப்பட்டதாகவும், இராணுவத்தால் அவர்கள் கொலை செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆகவே இது மறைக்கப்படக்கூடியதொரு விடயமல்ல. உண்மையும், நேர்மையுமான வகையில் இந்த விடயம் ஆராயப்பட வேண்டும்.
சோமரத்ன குறிப்பிட்டதற்கமைய செம்மணி பகுதியில் இருந்து இதுவரை 400க்கும் அதிகமான மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
அதனைக் காட்டிலும் மேலும் 200க்கும் அதிகமான எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படும் சூழல் காணப்படுகின்றன” எனவும் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |