துப்பாக்கிச் சூடுகளை நியாயப்படுத்த முனையும் அநுர அரசு : மொட்டு தரப்பு பகிரங்கம்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், பாதாள உலக துப்பாக்கிச் சூடுகளையும் கொலைகளையும் இயற்கையின் ஒரு பகுதி என எமக்கு விளக்க முயற்சிக்கிறதா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன (Sanjeeva Edirimanna) தெரிவித்துள்ளார்.
இலங்கை சட்டத்திற்கும் அரசியலமைப்பிற்கும் அமைவாக, நாட்டில் இடம்பெறும் ஒவ்வொரு குற்றமும் அரசாங்கத்திற்கு எதிரான குற்றமாகவே கருதப்பட வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அக்குரேகொட இரட்டைக் கொலை
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அக்குரேகொட இரட்டைக் கொலையின் பின்னர் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் சில அறிக்கைகளை எம்மால் கேட்க முடிந்தது.

குறித்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற பகுதி அதி பாதுகாப்பு வலயமல்ல, இது ஒரு தனிப்பட்ட சம்பவம், இதன் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை, இது சட்டத்தின் ஆட்சிக்கு அச்சுறுத்தலாக கருதப்பட வேண்டிய செயல் அல்ல என தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ஆனந்த விஜயபால நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
அமைச்சரின் இந்த பொறுப்பற்ற கூற்று, மேலும் பல கொலைகளைச் செய்ய பாதாள உலகத்தினருக்கு விடுக்கப்பட்ட அழைப்பாகவே நாம் கருதுகிறோம்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், பாதாள உலக துப்பாக்கிச் சூடுகளையும் கொலைகளையும் இயற்கையின் ஒரு பகுதி என எமக்கு விளக்க முயற்சிக்கிறதா?
ஆனந்த விஜயபாலவின் கருத்து
ஆங்காங்கே பொது வீதிகளில் பட்டப்பகலில் துப்பாக்கிச் சூடு நடத்துவது இயற்கையின் ஒரு பகுதி என்று அரசாங்கம் நினைக்கிறதா? இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்குப் பொறுப்பான அமைச்சரே நாடாளுமன்றத்தில் இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்தத் துப்பாக்கிச் சூடுகளும் கொலைகளும் அதி பாதுகாப்பு வலயத்தில் இடம்பெறவில்லை என்றால், அது ஒரு தனிச் சம்பவம் என்றால், அதன் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை என்றால், சட்டத்தின் ஆட்சிக்கும் அது அச்சுறுத்தல் இல்லை என்றால் இது மிகவும் சாதாரணமான அன்றாட நிகழ்வு என்றே அரசாங்கம் கூற முற்படுகிறது.
இலங்கையின் சட்டம் மற்றும் அரசியலமைப்பிற்கு இணங்க நாட்டில் நடக்கும் ஒவ்வொரு குற்றமும் நாட்டிற்கு எதிரான குற்றமாகவே கருதப்பட வேண்டும் என்பதை ஆனந்த விஜயபால அவர்களுக்கு நினைவூட்டுகிறோம். அவ்வாறு கருதினால் இதனை ஒரு தனிச் சம்பவமாக உங்களால் கூற முடியாது“ என அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |