எதிர்க்கட்சியிலிருந்து சுயாதீன தெரிவுக்குழுவை நியமிக்க சஜித் யோசனை
எதிர்க்கட்சியிலிருந்து சுயாதீன தெரிவுக்குழுவை நியமிக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச யோசனை முன்வைத்துள்ளார்.
சிறிலங்காவில் ஏற்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கான ஏதுவாக அமைந்த காரணங்களை வெளிப்படையாகக் கண்டறிந்து யதார்த்தங்களை தெரிந்து கொள்ளும் முகமாக நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை ஸ்தாபிக்கக் கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவின் யோசனையின் பிரகாரம் பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டாலும்,
இந்த தெரிவுக்குழுவின் தவிசாளராக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரான சாகர காரியவசம் நியமிக்கப்பட்டுள்ள பின்னனியில் இது வெறுமனே பேச்சுக்களுடன் மட்டுப்படுதப்படும் என்றும், பசில் ராஜபக்ச உள்ளிட்ட தரப்பை நிரபராதியாக்கி அவர்களை சரிகாணும் செயற்பாடுமே இடம்பெறும் என்பது தெளிவாக புலப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எதிர்க்கட்சி ஒன்றியத்தின் வாராந்த செயற்குழுக் கூட்டம் நேற்று(10) நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற போது கருத்துத் தெரிவிக்கையிலையே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஊழல் எதிர்ப்பு சட்டமூலம்

“கடந்த வார நாடாளுமன்ற அமர்வை நோக்கும் போதும் பசில் ராஜபக்சவின் கும்பல் ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவேற்ற மேலும் இரு வாரங்களுக்கு இழுத்தடிப்புச் செய்யும் பிரயத்தனத்தை முன்னெடுத்தாலும், எதிர்க்கட்சியில் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டாலும் எதிர்க்கட்சியின் முயற்சியால் குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டதாகவும் இதற்கு ஒத்துழைப்பு நல்கிய எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகலருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும்“ அவர் குறிப்பிட்டார்.
போராட்ட காலத்திற்கு பிற்பாடான இந்தக் காலப்பிரிவில் தமக்கு சார்பானவர்களை, தமது பிரதிநிதிகளைப் பயன்படுத்தி தம்மை சுத்தப்படுத்தி நல்லவர்களாக காண்பிப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் , அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள இந்த தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் சகல எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அதிலிருந்து விலகி எதிர்க்கட்சியாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து சபாநாயகர் அண்மையில் தெரிவித்ததன் பிரகாரம், எதிர்க்கட்சித் தலைவருக்கு நாடாளுமன்றத்தில் சிறப்புரிமைகள் காணப்படுகின்றமையினால் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் தனது தலைமையில் இந்த பொருளாதார சீரழிவுக்கான காரணங்களைக் கண்டறிய எதிர்க்கட்சியின் தெரிவுக்குழுவொன்றை ஸ்தாபித்து இதனை முன்கொண்டு செல்வோம் என்றும் அழைப்பு விடுத்தார்.
தெரிவுக்குழு

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 225 பேருக்கும் இதில் பங்கேற்க அழைப்பு விடுப்பதாகவும், சகலருக்கும் இதில் கேள்வி எழுப்பும் சந்தர்ப்பம் இருப்பதாகவும், இதற்கு எத்தகைய தடைகளும் தெரிவிக்கப்படாது என்றும், நாட்டின் பொருளாதார வங்குரோத்துக்கான காரணங்களை கண்டறியும் அரசாங்கத்தின் தெரிவுக்குழுவிற்கு பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் நியமிக்கப்பட்டமை பிரச்சினைக்குரிய விடயம் என்றும் சுட்டிக்காட்டினார்.
சபாநாயகருக்கு இது குறித்து சிறிதேனும் நியாயப்பாடு இருந்திருந்தால் அவர் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரையே நியமித்திருக்க வேண்டும் என்று தெரிவித்த அவர், மறைந்த அதிபரான தனது தந்தையரின் ஆட்சிக் காலத்தில் தெரிவுக்குழுவொன்றிற்கு எதிர்க்கட்சியின் மங்கள முனசிங்க நியமிக்கப்பட்டார் என்றும், இதற்கு பல்வேறு முன்னுதாரணங்கள் காணப்படுவதாகவும், இவ்வாறு எதிர்க்கட்சிக்கு இத்தகைய தெரிவுக்குழுவின் தவிசாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்டளவு தடைகள் மற்றும் சமன்பாடுகள் அப்போதே நிலவும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இன்னும் தெளிவாக குறிப்பிடுவதாக இருந்தால் பசில் ராஜபக்ச குழுவினரை சுத்தப்படுத்த எடுக்கும் இந்த முயற்சியை தோற்கடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 53 நிமிடங்கள் முன்