தன் பிள்ளைகளை பின்தொடரும் மர்ம நபர்...! சுரேஷ் சலேவின் மனைவி முறைப்பாடு
மர்ம நபர் ஒருவரால் தானும் தன் குழந்தைகளும் கண்காணிக்கப்படுவதாக சுரேஷ் சலேவின் மனைவியான மனோரி சலே முறைப்பாடு அளித்துள்ளார்.
குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான தேசிய ஆணைக்குழுவிடம் அவர் இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் துறையில் பணியாற்றும் ஒரு குறிப்பிட்ட நபர், சாதாரண உடையில் சந்தேகத்திற்குரிய கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுத் தன்னையும் தனது இரண்டு குழந்தைகளையும் மீண்டும் மீண்டும் கண்காணித்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள்
இதனடிப்படையில் நேற்று தனது 17 வயது மகளும் 22 வயது மகனும் தங்கள் தந்தையைப் பார்க்கத் தேசிய மருத்துவமனைக்குச் சென்றபோது அந்த நபர் குழந்தைகளைப் பின்தொடர்ந்து தனது கைபேசியில் அவர்களைப் புகைப்படம் எடுத்ததாக அல்லது காணொளி எடுத்ததாக அந்த முறைப்பாட்டில் முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அவர் இதற்கு முன்பும் தேசிய மருத்துவமனை மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை வளாகங்களுக்கு அருகில் சுற்றித் திரிவதைக் கண்டிருப்பதாகவும் மனோரி சலே குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய சூழ்நிலையில் குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான தேசிய ஆணைக்குழு, இந்த விவகாரம் குறித்து ஒரு சுதந்திரமான விசாரணையைத் தொடங்கவும் சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் காணவும் யாருடைய அறிவுறுத்தலின் பேரில் இத்தகைய செயல்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதைக் கண்டறியவும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மனோரி சலே கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |