மகிந்தவின் மேடையில் தனக்கு பிடித்த மிருகம் புலி என்றாராம்: அப்படியென்றால் அர்ச்சுனா சொன்னது...
அநுராதப்புரத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தெரிவித்த கருத்துக்களில், விடுதலைப்புலிகள் அமைப்பு மற்றும், தமிழ் புலம்பெயர் சமூகம் (Tiger Diaspora) பற்றி ஒன்றையும் குறிப்பிடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா புலி என்ற சொல்லை குறித்த மேடையில் பயன்படுத்தியதன் காரணம் தொடர்பில் தென்னிலங்கை ஊடகங்கள் எழுப்பி கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.
தன்னை அந்த விலங்குடன் ஒப்பிடுவதில் தவறில்லை என குறிப்பிட்ட அவர், தான் ஒருபோதும் விடுதலைப்புலிகளின் அமைப்பை மையப்படுத்தவில்லை என தெரிவித்துள்ளார்.
தான் 'புலி' என்ற மிருகத்தையே குறிப்பிட்டதாகவும், அது தனக்குப் பிடித்தமான மிருகம் என தெரிவித்துள்ளார்.
சிலருக்கு யானைகளைப் பிடிக்கும், சிலருக்கு பாம்புகளைப் பிடிக்கும். எனக்குப் புலிகளைப் பிடிக்கும் என அர்ச்சுனா இதன்போது பதில் வழங்கியுள்ளார்.
தாம் விடுதலைப் புலிகளின் புலம்பெயர் அமைப்பு என்று கூறவில்லை. வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்களையே 'புலம்பெயர்ந்தோர்' எனக் குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.
நாட்டின் மறுசீரமைப்பிற்கு அவர்கள் அளித்த நிதியைப் பெற்றுக்கொண்டு அரசாங்கம் எங்களை ஏமாற்றுகிறது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தான் ஒரு மருத்துவராக களுபோவில, பேராதனை ஆகிய மருத்துவமனைகளில் பணியாற்றி, சிங்கள நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ஆயுதம் ஏந்தும் எண்ணம் கொண்டவன் தான் அல்ல என அவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கோ அல்லது கைதுக்கோ தான் அஞ்சவில்லை.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு தன்னை விசாரிக்க விரும்பினால் வாட்ஸ்அப் மூலம் இருப்பிடத்தை அனுப்பினால் போதுமானது.
செருப்பு மற்றும் சாதாரண உடையில் தானாகவே நேரில் வரத் தயார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சாதாரண மனிதர்களை இலக்கு வைப்பதை விட்டுவிட்டு, மத்திய வங்கி பிணைமுறி ஊழலில் தொடர்புடைய அர்ஜுன் மகேந்திரன் போன்ற பெரிய குற்றவாளிகள் மீது கவனம் செலுத்த வேண்டும்.
மேலும், இந்த அரசாங்கத்திற்கு வாக்களிக்குமாறு மக்களுக்குக் கோரிக்கை விடுத்ததற்காகத் தற்போது வெட்கப்படுவதாக அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |