இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்குள் ஊடுருவ முயலும் ஆயுதக்குழு -தமிழகம் அதி உச்ச பாதுகாப்பில்
இலங்கையிலிருந்து படகொன்றில் ஆயுததாரிகள் குழு தமிழ்நாட்டிற்குள் நுழைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக இந்திய புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து தமிழ்நாட்டில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஐஎஎன்எஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை மத்தியபுலனாய்வு முகவர் அமைப்பு விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து கன்யாகுமாரி, தூத்துக்குடி, இராமேஸ்வரம், சென்னை ஆகிய பகுதிகளில் பொலிஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு பயணிக்கும் அந்தக்குழு யார்? எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த விபரங்கள் தெரியவரவில்லை என புலனாய்வு பிரிவினர் ஐஎஎன்எஸ் செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளனர்.
எச்சரிக்கை கிடைத்துள்ளது உண்மை. ஆனால் மேலதிக தகவல்களை வெளியிட முடியாது என சென்னை பொலிஸ் தலைமையகத்தை சேர்ந்த சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.கரையோர பகுதிகளிற்கு செல்லும் வீதிகளில் பொலிஸாரை நடவடிக்கையில் ஈடுபடுத்தியுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்